'பா.ஜ.க-வினரை மிரட்டி பார்க்கலாம் என தி.மு.க-வினர் நினைத்தால் அது நடக்காது' : சரவணகுமார் கைது குறித்து நாராயணன் திருப்பதி தடாலடி!
திண்டுக்கல் வடமதுரை பகுதி பா.ஜ.க சமூக ஊடக பிரிவின் செயலாளர் சரவணகுமார் திமுக அரசை விமர்சித்து முகநூலில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சரவணகுமாரை முகநூலில் அவதூறு பரப்பியதாக கூறி கைது செய்தது காவல் துறை. தொடர்ந்து பா.ஜ.க-வினர் திண்டுக்கல்லில் பா.ஜ.க-வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல போராட்டங்களுக்கு பின்பு சரவணகுமார் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில்,"இன்று காலை திண்டுக்கல் வடமதுரை பகுதி சமூக ஊடக பிரிவின் செயலாளர் சரவணகுமார் அவர்களை முகநூலில் அவதூறு பரப்பியதாக கூறி கைது செய்தது காவல் துறை. தகவலறிந்ததும் நமது கட்சியை சார்ந்த பலர் உடனடியாக காவல் நிலையம் சென்றதோடு மாவட்ட தலைவர் பழனி கனகராஜ் அவர்கள் களத்தில் இறங்கி சரவணகுமாரை விடுவிக்க போராடியதோடு அவர் மீது புகார் அளித்த தி மு க வினரின் பிரதமர் மற்றும் பாஜக நிர்வாகிகள் மீதான ஆபாச, அராஜக பதிவுகளை சுட்டிக்காட்டி தி மு க வினரை கைது செய்யாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பி உயர் அதிகாரிகளிடம் வாதிட்டார்.
மேலும், முன்னின்று கட்சி தொண்டர்களோடு போராட்டம் செய்து கைதானார். நானும் அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு பேசினேன். தி.மு.க-வினர் மீது நடவடிக்கை எடுக்காமல், பாஜகவினர் மீது கைது நடவடிக்கை நியாயமானது அல்ல என்று வாதிட்டேன். இந்நிலையில் திரு.சரவணகுமார் மீது வழக்கு பதிவிடப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக அறிந்தேன். வழக்குகளை கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. சட்ட ரீதியாக சந்திப்போம். ஆனால் இது போன்ற வழக்குகளில், கொரோனா தொற்று காலத்தில் கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் பலமுறை அறிவுறுத்தியும், தி.மு.க-வினரின் அராஜகத்தால், அழுத்தத்தால் ரிமாண்ட் செய்யும் நடவடிக்கைகள் தவறானது.