உலகம் முழுவதும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் 2வது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இத்தகைய பாதிப்புகளிலிருந்து தங்களுடைய நாட்டு மக்களை பாதுகாத்து கொள்வதற்கு முககவசம் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் ஏற்கனவே இங்கிலாந்து அரசு பொது மக்கள் வழியில் செல்லும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய கட்டாயம் இல்லை என முடிவை அறிவித்தது. அதைத் தொடர்ந்து தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை என இத்தாலி நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.99 கோடியை தாண்டி உள்ளது. இந்நிலையில் இத்தாலி நாட்டில் உள்ள மக்கள் வரும் 28ம் தேதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக் கவசங்கள் அணிவதிலிருந்து பொது மக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அதே சமயம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஒரு சில பகுதிகளில் அந்த தளர்வுகள் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்தை அடுத்து இத்தாலி நாடும் முக கவசம் அணிவதிலிருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.