கோவில் அருகே மீன் சந்தை- அதிர்ச்சியூட்டும் அறநிலையத்துறையின் சுற்றிக்கை!

Update: 2021-12-28 04:22 GMT

சென்னையில் கந்தசாமி மற்றும் ஆதிமொட்டையம்மன் கோவில் அருகே மீன் சந்தை அமைக்கும் பணிக்கு இந்து அறநிலையத்துறை அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸ் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குயம்பேட்டை அருகே அருள்மிகு கந்தசாமி மற்றும் ஆதிமொட்டையம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் அருகே இயங்கிவந்த பழைய சந்தை கட்டிடத்தை இடித்துவிட்டு புதியதாக ரூ.1.55 கோடி செலவில் புதிதாக மீன் சந்தை அமைப்பதற்கு இந்து அறநிலையத்துறை அனுமதி வழங்கி வெளியிட்டுள்ள அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 27.12.2021 என்று தேதியிட்ட இந்த அறிக்கையில் மீன் சந்தை கட்டுவதற்கான முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்படுவதாக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் முன்னிலையில் முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மீன் சந்தை கட்டுவதற்காக ரூ.1.55 கோடி தொகையை கடனாக திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், திருவேற்காடு அருள்மிகு தேவிகருமாரியம்மன் திருக்கோவில் மற்றும் மயங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் மற்றும் வைகுண்ட பெருமாள் வகையறா திருக்கோவில் மூலம் பெற இருப்பதும் இந்து அறநிலைத்துறை வெளியிட்டிருக்கும் நோட்டீஸ் மூலம் தெரிய வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கோவில் வருவாயை கோவில் சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் கோவில் வருவாயை கடனாக பெற்றுக்கொண்டு கோவில் அருகாமையிலேயே மீன் சந்தை அமைக்கும் பணிக்கு செலவிடுவது முற்றிலும் அறங்கெட்ட செயல் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அசைவ உணவை விரும்பி உண்ணும் இந்துக்கள் கூட அசைவம் உண்டுவிட்டு கோவிலுக்கு செல்ல தயங்குவர் எனும்போது கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வண்ணம் கோவிலுக்கு அருகிலேயே மீன் சந்தை அமைப்பது திட்டமிட்ட சதியாக தெரிகிறது என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

Source :

Tags:    

Similar News