CAA எந்த அளவிற்கு சிறுபான்மை மக்களை பாதுகாக்கிறது தெரியுமா?. முக்கிய நோக்கம் இதுதான்..

Update: 2024-03-17 14:25 GMT

நாட்டில் எந்த ஒரு குடிமக்களுக்கும் பாதிப்பின்றி, குறிப்பட்ட நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுபான்மையினருக்கு நிவாரணம் வழங்குவதையே குடியுரிமைத் திருத்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறினார். நாகரிக நெறிமுறைகளை இதயமாகக் கொண்டு பன்முகத்தன்மையின் பெருமைமிக்க அடையாளமாக இந்தியா திகழ்ந்து வருகிறது என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தற்போதுள்ள குடிமக்களின் உரிமைகளை மீறாமல், குறிப்பிட்ட நாடுகளில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.


"ஐதராபாத்தில் உள்ள கன்ஹா சாந்தி வனத்தில் இன்று நடைபெற்ற உலக ஆன்மிகத் திருவிழாவின் நிறைவு விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், பாரதம் ஆன்மீகத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட உலகளாவிய ஆன்மீக மையம்" என்றார். ஆன்மீகம் பாரதத்தின் கட்டமைப்பில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர், நமது மதம், நெறிமுறைகள், தத்துவம், இலக்கியம், கலை, கட்டிடக்கலை, நடனம், இசை, நமது அரசியல் மற்றும் சமூக-பொருளாதார ஒழுங்கு ஆகியவை ஆன்மீக சக்தியால் தொடர்ந்து செல்வாக்கு பெற்றுள்ளன என்று கூறினார். இந்தியாவின் ஆன்மீக ஞானத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியதில் சுவாமி விவேகானந்தருக்கு முக்கிய பங்கு உண்டு என்றும் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.



அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், அடக்குமுறை, சகிப்புத்தன்மையின்மை மற்றும் அநீதி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள உலகில் பாரதம் நம்பிக்கை மற்றும் அறிவொளியின் கலங்கரை விளக்கமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையின் மதிப்புகளை அனைவரும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாடு அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News