ரூபாய் 1.10 லட்சம் கோடியை கடந்த பாதுகாப்புத் தளவாட உற்பத்தி- ராஜ்நாத் சிங் தகவல்!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு 1000 கோடியாக இருந்த பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி மதிப்பு தற்போது 16,000 கோடியை அடைந்துள்ளது.

Update: 2024-03-08 07:24 GMT

நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூபாய் 1.10 லட்சம் கோடியை கடந்துள்ளதாக அமைச்சர் ராஜநாத் சிங் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பாவது:-


நாட்டின் தன்மைக்கு ஏற்ப அரசு துணிச்சலுடன் செயல்படுவதால் இந்திய ராணுவம் முன் எப்போதையும் விட வலுவாக உள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தெரிவித்துள்ளார் .புதுடெல்லியில் தனியார் ஊடக நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியத்தன்மை உணர்வுடன் அதை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதால் இந்திய ராணுவம் எப்போதும் விட தற்போது வலுவாக உள்ளது என்று கூறினார்.


பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தற்சார்பு திட்டத்தை ஊக்குவிப்பது அரசு கொண்டுவந்துள்ள மிகப்பெரிய மாற்றம் என்றும் ராஜ்நாத்சிங் விளக்கினார். இது இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கு புதிய வடிவத்தை அளித்து வருகிறது என்று அவர் கூறினார். உத்திரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி தொழில் துறை வழித்தடங்களை அமைப்பது உட்பட தற்சார்பை அடைய பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார்.


2014 ஆம் ஆண்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி சுமார் 40,000 கோடியாக இருந்த நிலையில் தற்போது அது  1.10 லட்சம் கோடியை கடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு 1000  கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி மதிப்பு தற்போது 16,000 கோடியை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2028 - 29 ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடப் பொருள்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக ராஜ்நாத்சிங் கூறினார்.


SOURCE :Kaalaimani.com

Similar News