இமாச்சலப் பிரதேச கிராமத்தில் முதல்முறையாக செல்போன் இணைப்பு வசதி கொண்டு வந்த மோடி அரசு!

இமாச்சல பிரதேசத்தின் கிராமம் ஒன்றுக்கு முதல் முறையாக செல்போன் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த கிராம மக்களை பிரதமர் மோடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி மகிழ்வித்தார்.

Update: 2024-04-20 04:28 GMT

இமாச்சல பிரதேசத்தின் ஸ்பிடி பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமமான ஜியு செல்போன் இணைப்பு வசதி பெறாமல் இருந்தது .இந்த கிராம மக்கள் தங்கள் செல்போன்களை பயன்படுத்துவதற்கு சுமார் 8 கிலோமீட்டர் வரை செல்ல வேண்டி இருந்தது .இந்த கிராமத்துக்கு கடந்த தீபாவளியின்போது பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மக்கள் அவசர தேவைக்கு செல்ஃபோன்களை பயன்படுத்த முடியாததை அறிந்த அவர் கிராமத்துக்கு விரைவாக செல்போன் இணைப்பு வசதி ஏற்படுத்துவதாக உறுதி அளித்தார்.

அதன்படி ஜியோ கிராமத்துக்கு செல்போன் இணைப்பு வசதி ஏற்படுத்தும் பணிகள் வேகமாக நடந்தன. இதற்காக செல்போன் கோபுரங்கள் போன்றவை நிறுவப்பட்டு நெட்வொர்க் வசதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தொடர்ந்து முதல் முறையாக இந்த கிராம மக்கள் நேற்று செல்போன் வசதிகளைப் பெற்றனர். உடனே அவர்கள் தங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு செல்போனில் அழைத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் செல்போன் வசதி ஏற்படுத்தப்பட்ட உடன் பிரதமர் மோடியும் அந்த கிராமத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

சுமார் 13 நிமிடங்கள் நடந்த இந்த உரையாடலின் போது அவர்களது கிராமத்துக்கு சென்றதையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு செல்போன் இணைப்பு விரைவாக வழங்கப்படும் என உறுதியளித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார் .நாட்டின் தொலைதூரப் பகுதிகள் உட்பட அனைத்து இடங்களுக்கும் மின் இணைப்புடன் தொலைதொடர்பு வசதிகளையும் ஏற்படுத்துவதே தனது அரசின் நோக்கம் எனக் கூறியவர் தான் பதவிக்கு வந்த போது 18000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின் வசதி பெறாமல் இருந்ததாகவும் கூறினார்.

மேலும் துடிப்பான கிராமம் திட்டத்தின் கீழ் எல்லையோர கிராமங்களில் வளர்ச்சி மேம்பாட்டுக்கு தனது அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களையும் பிரதமர் மோடி எடுத்துக் கூறினார். தனது மூன்றாவது ஆட்சி காலத்தில் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் இது ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிதும் பயனளிக்க வேண்டும் கூறினார். பிரதமர் மோடியிடம் பேசிய கிராமவாசி ஒருவர் தங்களுக்கு செல்போன் இணைப்பு கிடைத்திருப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என பிரமிப்புடன் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News