கோவை மற்றும் சேலத்தில் குழாயில் சமையல் எரிவாயுவை பெறலாம், நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

கோவை மற்றும் சேலத்தில் குழாயில் சமையல் எரிவாயுவை பெறலாம், நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

Update: 2018-11-22 04:39 GMT
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்ட, சேலம் மற்றும் கோயம்புத்தூர் நகர எரிவாயு விநியோக திட்டத்திற்கு இம்மாதம் 22ஆம் தேதியன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார் என்று இந்தியன் ஆயில் மாநிலத் தலைவர் திரு. சித்தார்த்தன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :

“நாடெங்கிலும் 129 மாவட்டங்களில் அமைந்துள்ள 65 புவியியல் பகுதிகளில், 9ஆவது ஏலச்சுற்றில் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் உரிமம் வழங்கப்பட்ட நகர எரிவாயு விநியோகத் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இம்மாதம் 22ஆம் தேதியன்று காணொலி காட்சி மூலம், புதுதில்லியிலிருந்து அடிக்கல் நாட்டுகிறார். இவற்றில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், தமிழ்நாட்டில் சேலம் மற்றும் கோயம்புத்தூரில் இந்தத் திட்டங்களை செயல்படுத்தவுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 10 மாவட்டங்களில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டங்கள் 5 நிறுவனங்கள் வாயிலாக அமைக்கப்படவுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டங்கள் அமைக்கப்படும். அழுத்தமேற்றப்பட்ட இயற்கை எரிவாயு (அதிக அளவில் வாகன எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவது), குழாயில் செலுத்தப்படும் இயற்கை எரிவாயு (வீடுகளில் பயன்படுத்தப்படுவது), வர்த்தக ரீதியான மற்றும் தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எரிவாயு என்ற நான்கு பிரிவுகளில், குழாய்கள் மூலம் எரிவாயுவை விநியோகிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நகர எரிவாயு நெட்வொர்க்குகளை விரிவுபடுத்தும் வகையில், இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை விட மலிவான விலையில், வீடுகளுக்கான சமையல் எரிவாயு மற்றும் போக்குவரத்துக்கான எரிவாயுவின் முழுத் தேவையையும் இத்திட்டம் மூலமாக ஈடு செய்ய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இயற்கை எரிவாயு தூய்மையானதும், நிலக்கரி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விட மலிவானதும் ஆகும்”.
இவ்வாறு திரு. சித்தார்த்தன் தெரிவித்தார்.

Similar News