நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தொழில்துறை: மோடி மீண்டும் பிரதமரானால் செய்யப்பட இருக்கும் சீர்திருத்தங்கள்- நிர்மலா சீதாராமன்!

நாட்டின் வளர்ச்சியில் தொழில் துறை மிக முக்கிய பங்கு வகிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-29 17:00 GMT

இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதில் தொழில் துறையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்திய தொழில் வர்த்தகம் சம்மேளனங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற 2047 இல் வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த தொழில் துறை என்ற தலைப்பில் ஆன கருத்தரங்கில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன் பேசியதாவது :-


காலணி ஆதிக்கத்துக்கு மத்தியிலும் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர். எத்தனை தடைகள் வந்தாலும் அதை சமாளித்து முன்னேறும் திறன் படைத்தது நமது தொழில் துறை .அந்த வகையில் 2047 இல் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றும் இலக்கில் தொழில்துறையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகும் கூட பட்ஜெட்டில் மூலதன செலவினங்களுக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.


இந்திய தொழில் துறையில் சர்வதேச அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் தொழில் துறைக்கான சீர்திருத்தங்களில் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது. நிலம், தொழில், மூலதனம் மற்றும் நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொள்வதை விட எண்ம உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.


ஏனெனில் தற்காலத்தில் சிறந்த எண்ம உள்கட்டமைப்பு இல்லாமல் எந்த ஒரு நாடும் வளர்ச்சி அடைய முடியாது .அதே போல் விண்வெளி, செயற்கை நுண்ணறிவு ,வேளாண் உற்பத்தி, சுற்றுலா என அனைத்து துறைகளிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. எனவே தான் மூன்றாவது முறை பிரதமராக தான் பதவி ஏற்ற பிறகு இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார் .இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.


SOURCE :Kaalaimani.com

Similar News