நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான 2024 லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நாடு முழுவதும் 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் பலர் பாஜகவின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிற நிலையில், சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் பாஜக சிக்கிம் மாநிலத்தில் வெற்றி பெற்றால் அம்மா உணவகம் அமைக்கப்படும் என்ற ஒரு வாக்குறுதி இடம் பெற்றுள்ளது.
இந்த திட்டமானது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கடந்த 2013 ஆம் ஆண்டில் தமிழக முழுவதும் குறைந்த விலையில் மக்கள் அனைவருக்கும் தரமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது!. மேலும் இந்த திட்டத்தை அண்டை மாநிலங்களும் தமிழ்நாட்டைப் பார்த்து தொடங்கிய நிலையில் சிக்கிம் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலின் தனது வாக்குறுதியாக பாஜக இதனை அறிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
Source : Asianet news Tamil