விபத்துகளை தவிர்ப்பதற்காக ரயில் என்ஜின்களில் ஏ.ஐ தொழில்நுட்ப கேமராக்கள்!

ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு ரயில் என்ஜினிலும் முக்கிய யார்டுகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று ரயில்வே வாரியம் கூறியுள்ளது.

Update: 2024-08-21 16:15 GMT

சமீப காலமாக நாட்டின் பல பகுதிகளில் ரயில் விபத்துகள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. ரயில்கள் மோதல் மற்றும் ரயில்கள் தடம் புரளும் சம்பவங்கள் நடக்கின்றன. இந்நிலையில் விபத்துகளை தவிர்ப்பதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த ரயில்வே வாரியம் முன் வந்துள்ளது. ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹா உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ரயில் விபத்துக்கள் அதிகரித்து வருவதால் ஒவ்வொரு ரயில் என்ஞ்சினிலும் முக்கியமான ரயில்வே யாரடுகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். தண்டவாளத்தில் ஏதேனும் அசாதாரண சூழ்நிலை காணப்பட்டால் அதைக் கண்டறிய இந்த கேமராக்கள் பயன்படும். பிரயாக்ராஜில் கும்பமேளா அடுத்த ஆண்டு நடக்கிறது. கடந்த கும்பமேளாவுக்கு 530 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

அடுத்த ஆண்டு கும்பமேளாவுக்கு சுமார் 900 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 30 கோடி பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. கும்பமேளா சமயத்தில் பாதுகாப்பு அமைப்புகள் ரயில் தண்டவாளங்களை தொடர்ந்து கண்காணிக்கும். சமூக விரோத சக்திகள் தண்டவாளங்களை சேதப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News