அயோத்தி : "திட்டமிட்டதை விட ராமர் கோயில் பிரம்மாண்டமாக இருக்கும்" - கோயிலின் வடிவமைப்பாளர் சந்திரகாந்த்.!
முதலில் திட்டமிட்டதை விட கோயில், இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும்.
500 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 5-இல் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், RSS தலைவர் மோகன் உட்பட பலரும் கலந்து கொள்ள உள்ளனர். கொரானா வைரஸ் பரவல் காரணமாக 200 பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் சமூக விலகல் உரியமுறையில் கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வருடங்களுக்கு முன்னால் ராமர் கோவில் கட்டுவதற்கு மாதிரி திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. VHP ன் தலைவர் மறைந்த அசோக் சிங்கால், சோமநாதர் ஆலயத்தை 1950ல் வடிவமைத்த பிரபா ஷங்கர் சோம்புரா என்ற பிரபல கட்டடக் கலை நிபுணரின் பேரனாகிய சந்திரகாந்த் சோம்புராவிடம் ஒப்படைத்தார். இப்போது 77 வயதாகும் சந்திரகாந்த், தான் முதன்முதலில் ராமர் கோவிலை திட்டமிட ஆரம்பித்தபோது பாதுகாப்பு காரணங்களுக்காக அளக்கும் டேப்பை கூட அயோத்தி இடத்திற்கு எடுத்துச் செல்ல விடவில்லை என்றும் தன் கால்களாலேயே அளந்து மாதிரியை வடிவமைத்ததாகவும் கூறுகிறார்.
நாகரா பாணியில் கட்டப்படும் ராமர் கோவில் முதலில் திட்டமிட்டு இருந்ததை விட மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் அப்போது இரண்டு மாடங்களை வைத்து தான் மாதிரியை திட்டமிட்டதாகவும், தற்போது ஐந்து மாடங்கள் எழுப்பப் பட உள்ளதாகவும், முதலில் திட்டமிட்டதை விட இரண்டு மடங்கு கோயில் பெரிதாக இருக்கும் என்றும், கோயில் உயரமும் திட்டமிட்டதை விட அதிகம் இருக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதற்கு, தற்பொழுது ராமஜென்ம பூமியின் முழு இடமும் கோவிலுக்கு சொந்தமாக்கி விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும், நாடு முழுவதிலும் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதுமான அளவு இட வசதி வேண்டும் என்பதே காரணங்களாகக் கூறப்படுகிறது.