வீடியோ கான்பரன்ஸ் முறையில் எளிமையாக ராமர் கோவில் பூமி பூஜை ? திட்டமிட்டவாறு வரும் 30 ஆம் தேதி நடத்த ஆலோசனை ?

வீடியோ கான்பரன்ஸ் முறையில் எளிமையாக ராமர் கோவில் பூமி பூஜை ? திட்டமிட்டவாறு வரும் 30 ஆம் தேதி நடத்த ஆலோசனை ?

Update: 2020-04-14 07:03 GMT

அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிகளை கவனிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ராமஜென்ம பூமி திரத் ஷேத்ர டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது.

ராமர் பிறந்த இடத்தில் இருந்த ராமர் சிலையும், இதர சிலைகளும் சென்ற மாதம் 25-ந் தேதி, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலையில் தற்காலிக கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

இந்த நிலையில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை இம்மாதம் 30-ந் தேதி நடத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். பூமி பூஜையில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், தற்போது நாடுதழுவிய ஊரடங்கு அமலில் இருப்பதால், 30-ந் தேதி பூமி பூஜையை பெரிய அளவில் நடத்துவதில் சிக்கல் நிலவுகிறது.

அதனால், பூமி பூஜை தள்ளி வைக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், அது இந்துக்களுக்கு மிகவும் உகந்த நாள் என்பதால், அதே நாளில் அதிக கூட்டம் சேர்க்காமல் பாதுகாப்பு முன் எச்சரிக்கைகளுடன் நடத்த அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

இதன்படி இந்த விழாவை ஆவலுடன் எதிர்பார்க்கும் கோடிக்கணக்கான ராம பக்தர்கள் வீட்டில் இருந்தே காணொலி காட்சி மூலம் பார்க்கும் வசதியுடன் பூமி பூஜையை நடத்துவது பற்றி அறக்கட்டளை நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இன்னொரு புறம் நிலைமை சீரடைந்த பிறகு பிரமாண்டமாக விழா நடத்தலாம் எனவும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

என்றாலும் இதுகுறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத்ராய் தெரிவித்தார். பிரதமர் மோடியும் காணொலி காட்சி மூலம் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

Similar News