ஒரு லட்சம் பேர் வரை தங்கும் அளவிற்கு அயோத்தியில் 'வை-ஃபை' உள்பட நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்படும் கூடார நகரங்கள்!
வைஃபை உட்பட நவீன வசதிகளுடன் அயோத்தியில் கூடார நகரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு லட்சம் பேர் வரை தங்கலாம்.
அயோத்தியில் வருகிற 22-ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட்டு குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த கோவில் கட்டுமான பணிகள் கடந்து 2020- ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே அயோத்திக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றபடி அயோத்தி நகரில் கட்டமைப்பு வசதிகளையும் மத்திய மாநில அரசுகள் மேம்படுத்தி வருகின்றன. நகரை இணைக்கும் அனைத்து சாலைகளும் நான்கு வழி சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன . ரயில் நிலையம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து தினமும் 200க்கும் மேற்பட்ட நகரங்களை இணைக்கும் வகையில் புதிய ரயில்கள் விடப்பட்டுள்ளன. சர்வதேச விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால் அயோத்தி விமான நிலையம் கட்டப்பட்ட உடன் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி நகரம் 120 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது . மாநகராட்சி அந்தஸ்து பெற்ற அயோதியில் கடந்த 2011- ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 55 ஆயிரத்து 890 பேர் வசிக்கின்றனர். அயோத்தி பழங்கால நகரம் என்பதால் அங்கு குறுகிய சாலைகள் தான் இருக்கின்றன.
எனவே மாநில அரசு அயோத்தியை விரிவாக்கம் செய்யும் வகையில் துணை நகரத்தை உருவாக்கி வருகிறது. அங்கு குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் போன்ற புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த பணிகள் முழுமை பெற இன்னும் சில ஆண்டுகளாகும். இதற்கிடையில் கோவிலுக்கு வரும் பக்தர்களை தங்க வைக்க ஏதுவாக அயோத்தி வளர்ச்சி கழகம் கூடார நகரங்களை அமைத்து வருகிறது .அதில் குப்தார் கார்ட் , பிரமா குந்த், பேக் பைஜாசி ஆகிய மூன்று இடங்களில் பணிகள் முடிந்து விட்டன. கரசேவ்க்புரம், மனிராம் தாஸ் சாவ்னிஆகிய பகுதிகளில் பணிகள் நடந்து வருகிறது.