'சுகன்யா சம்ரிதி யோஜனா' மூலம் மீண்டும் ஒரு நற்செய்தி சொன்ன மத்திய அரசு!

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் என்று சொல்லப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

Update: 2024-03-22 16:43 GMT

'சுகன்யா சம்ரிதி யோஜனா' என்கிற செல்வமகள் சேமிப்பு திட்டமானது, பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமாகும்.அதிக வட்டி வழங்கப்படும் திட்டம் என்பதால், வாடிக்கையாளர்களின் ஆதரவை இந்த திட்டம் தொடர்ந்து பெற்று வருகிறது.வெறும் ரூ.250 அல்லது நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி, செல்வமகள் கணக்கை ஆரம்பிக்கலாம். இந்த திட்டத்தில், இன்னொரு முக்கியமான அம்சம், மாதா மாதம் செலுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை.ஒரு வருடத்துக்கு மொத்தமாகவும் செலுத்தலாம்.


அதிகபட்சமாக ஒரு வருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம். சேமிப்புக் கணக்கிற்கு முதிர்வு என்பது, கணக்கு தொடங்கப்பட்ட அன்றிலிருந்து 21 வருடங்களில் முடிவு பெறும். கணக்கு தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் சேமிப்பு தொகையை நீங்கள் செலுத்த முடியும்.பெண் குழந்தை 18 வயதை எட்டும்போது அவர்களுடைய கல்வி செலவுக்கு இந்த முதலீட்டிலிருந்து பாதி தொகையை எடுத்துக்கொள்ளலாம். 2வது பெண் குழந்தைக்கு 10 வயது நிரம்பியிருக்கக்கூடாது. அதாவது, குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் சேரலாம்.


ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளை மட்டுமே இணைக்க முடியும். ஒருவேளை இரட்டை குழந்தைகள் அல்லது ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் என்றால், அவர்களுக்கென்றே விதி விலக்கு உண்டு. பெண் குழந்தையின் பெற்றோர் மட்டுமல்லாமல், சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாகவும் கணக்கில் சேரலாம்.இந்த திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச முதலீட்டு தொகை 250 ரூபாய். அதாவது கணக்கை செயலில் வைத்திருக்க ஒரு நிதியாண்டில் ரூ.250 முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டிலும் இந்த அளவிற்கு திட்டத்தில் முதலீடு செய்யாவிட்டால், கணக்கு மூடப்படும்.


கணக்கை மறுபடியும் செயல்படுத்த வேண்டுமானால், கணக்கு வைத்திருப்பவர்கள் வருடத்துக்கு ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும்.போஸ்ட் ஆபீஸ்களில் செல்வமகள் திட்ட கணக்கினை தொடங்கலாம்.அல்லது பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலம் தொடங்கலாம். அல்லது ஆன்லைன் மூலமாகவும் ஆக்டிவேட் செய்ய முடியும். இதுதவிர பொதுத்துறை வங்கிகளான SBI போன்ற வங்கிகளின் வெப்சைட்களிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தனியார் வங்கிகளான ICICI BANK, AXIS BANK, HDFC BANK போன்ற வெப்சைட்களில் இருந்தும் பெறலாம்.


ஒவ்வொரு காலாண்டிற்கு வட்டி விகிதத்தை மத்திய அரசு அறிவித்துவருகிறது. தற்போது துவங்கப்போகும் முதல் காலாண்டான ஏப்ரல் - ஜுன் வரையிலான காலத்திற்கு, செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இப்போதுள்ள 8.2% வட்டியே நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், காலாண்டிலேயே இதில் ஓரளவு முதலீடு செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அத்துடன், அரசு வட்டி விகிதத்தை குறைக்காமல் வெறும் 8.2% என்ற அளவிலேயே வைத்திருப்பதாக அறிவித்துள்ளது முதலீடு செய்தவர்களுக்கும் பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

Similar News