யார் முட்டாள்? மு.க.ஸ்டாலினா? தமிழர்களா? - அடுத்த மாதம் விடை தெரியும்!
யார் முட்டாள்? மு.க.ஸ்டாலினா? தமிழர்களா? - அடுத்த மாதம் விடை தெரியும்!
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முஸ்லிம் மதவெறியின் காரணமாக துரத்தி அடிக்கப்பட்டு, இந்தியாவிற்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், பாரிசிகள், சீக்கியர்கள், ஜெயின்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்தது.
இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார். இது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் இந்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இல்லாத நிலையிலும், 125 எம்பிக்கள் ஆதரவுடன் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறை வேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்த மசோதா, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது ஒப்புதலுக்கு பிறகு, இது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டத்தை வைத்து இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் ஆதரவை பெறுகின்ற உள்நோக்கத்தோடு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.
இருப்பினும் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில் எந்தவிதமான பெரிய அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. திமுக இந்த மசோதாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆனால் மக்கள் இதை கண்டுகொள்ளவில்லை. இதுபோலத்தான் மற்ற மாநிலங்களிலும் நிலவரம் உள்ளது.
இந்த நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரஸ் முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பேக்கல் போன்றவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தியாவின் குடியுரிமை தொடர்பான அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடமே உள்ளது. மாநில அரசுக்கு இதில் எந்த வேலையும் இல்லை. ஒருவருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டுமா? கூடாதா? என்பதை முடிவு செய்யும் இடத்தில் மத்திய உள்துறை உள்ளது. மத்திய உள்துறை அனுமதித்து குடியுரிமை வழங்கப்பட்ட ஒருவரை, எந்த மாநில அரசும் தடுத்து நிறுத்திவிட முடியாது.