பெங்களூரு கலவர வழக்கு.. காங்கிரஸ் முன்னாள் மேயர் சம்பத்ராஜ் சிக்க யார் காரணம்?பரபரப்பான தகவல்.!

பெங்களூரு கலவர வழக்கு.. காங்கிரஸ் முன்னாள் மேயர் சம்பத்ராஜ் சிக்க யார் காரணம்?பரபரப்பான தகவல்.!

Update: 2020-12-02 08:31 GMT

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென்று ஒரு தரப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் காங்கிரசின் முன்னாள் மேயர் சம்பத்ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கைதுக்கு அவரது கட்சியை சேர்ந்தவர்களே காரணம் என கூறப்படுகிறது. பெங்களூரு மாநகர், தேவர்ஜீவனஹள்ளி மற்றும் காடுகொண்டனஹள்ளி போலீஸ் சரகத்திற்கு ஓட்டியுள்ள காவல் பைரசந்திராவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி  இரவு திடீரென்று கலவரங்கள் ஏற்பட்டது.


இந்த கலவரத்தில் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த கலவரத்தில் தொடர்புடையவர் என 400க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது  செய்துள்ளனர். கலவரம் தொடர்பான விசாரணை நடத்தும் பொறுப்பு பெங்களூரு நகர மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கலவரம் தொடர்பாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, பெங்களூரு 67வது சிசிஎச் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடைக்கால குற்றப்பத்திரிகையில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மேயர் ஆர்.சம்பத்ராஜ், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஜாகீர் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்த்துள்ளனர்.


இந்த வழக்கு சம்பந்தமாக முன்னாள் மேயர் சம்பத்ராஜை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். அவர்  ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார் தற்போது அந்த மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பெங்களூரு கலவரத்தில் முன்னாள் மேயர் சம்பத்ராஜை குற்றவாளியாகியதில் மிகப்பெரிய அரசியல் சதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த 2010ம் ஆண்டு நடந்த பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் தேவர்ஜீவனஹள்ளி வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி  பெற்ற சம்பத்ராஜ், சிறப்பாக வளர்ச்சி பணிகள் மேற்கொண்டுள்ளதாகவும் மீண்டும் 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 2வது முறையாக அதே வார்டில் வெற்றி பெற்றதுடன் மாநகராட்சி மேயராக ஒரு வருடம் பதிவி வகித்துள்ளார்.


கடந்த 2018ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவை பொதுதேர்தலில் சி.வி.ராமன் நகர் தனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இருப்பினும் மீண்டும் அவருக்கு 2023ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் புலிகேசிநகர் தனி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர் கவுன்சிலராக இரண்டு முறை வெற்றி பெற்ற தேவர் ஜீவனஹள்ளி வார்டு புலிகேசிநகர் தொகுதியில் வருகிறது.

இந்த தொகுதி வெற்றியை தீர்மானிக்கும் வாக்கு வங்கியாக இஸ்லாமியர்கள் மற்றும் தமிழர்கள் அதிகமாக வகிக்கக்கூடிய ஒரு வார்டு ஆகும். இந்த தொகுதியில் நின்றால் எளிதில் வெற்றி  பெற முடியும் என்று கருதியுள்ளார்.


இது சட்டப்பேரவை தேர்தலில் அவருக்கு சாதமாகிவிடும் என்பதால், சி.வி.ராமன்நகர் பேரவை தொகுதியில் மட்டுமின்றி புலிகேசிநகர் தொகுதியிலும் அவர் போட்டியிடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது கட்சியை சேர்ந்த காங்கிரஸ் காரர்களே திட்டமிட்டு காவல்பைரசந்திரா கலவரத்தில் அவரை சிக்க வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அவர் ஒரு தமிழர் என்பதால் கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அவரை இந்த கலவரத்தில் சிக்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News