எம்.ஜி.ஆர்., பெயர்.. அடுத்த வீட்டுக்காரரின் பெயரை இன்சியலாக போட்டுக்கொள்வதற்கு சமம்.. கமலை தாக்கும் அதிமுக நாளிதழ்.!

எம்.ஜி.ஆர்., பெயர்.. அடுத்த வீட்டுக்காரரின் பெயரை இன்சியலாக போட்டுக்கொள்வதற்கு சமம்.. கமலை தாக்கும் அதிமுக நாளிதழ்.!

Update: 2020-12-18 11:35 GMT

அடுத்த கட்சித் தலைவரின் புகழை தங்களுடையதாக்க நினைப்பதும், அண்டை வீட்டுக்காரரின் பெயரை அப்பாவுக்கு பதில் இன்சியலாக போட்டுக்கொள்வதும் என்றுதானே என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளது.

எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தும் கமலை கடுமையாக விமர்சித்துள்ள அதிமுகவின் நாளேடான ‘நமது அம்மா’வின் செய்தியில் ‘‘எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவன் நான் என்று பேசியிருந்தார் கமல்ஹாசன். மேலும், எம்.ஜி.ஆரின் ஆட்சியை தருவேன் என்கிறார் ரஜினிகாந்த். ஏற்கெனவே பச்சை எம்.ஜி.ஆர். கிளிப்பச்சை எம்.ஜி.ஆர்.என்று அரை டஜனுக்கும் மேலானா ஆட்கள் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

எம்.ஜி.ஆர் தன் உதிரத்தில் விதையூன்றி உயிராக வளர்த்த இயக்கம் பொன்விழாவை நோக்கி வீறுநடை போடுகிறது. தொடங்கப்பட்டு 49 ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆளும் இயக்கமாக உயர்ந்து நிற்கிறது. மக்கள் திலகத்தை தங்கள் அரசியல் பிழைப்புக்கு சொந்தம் கொண்டாட நினைப்பவர்கள், புரட்சித்தலைவர் பெயரை பயன்படுத்தி அரசியல் அறுவடை செய்யலாம் என ஆசைப்படுபவர்கள் வேண்டுமானால், அதிமுகவில் வந்து அடிப்படை உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.

அதனைவிட்டுவிட்டு புரட்சித்தலைவரின் பெயரைச் சொல்லி தங்களை பலப்படுத்திக் கொள்ளலா என நினைத்திருப்பதும், தங்களின் அரசியல் இயக்கத்திற்கு புரட்சித்தலைவரின் திருநாமத்தை ஜீவநாடியாக்கி பிழைக்கலாம் என கனவு காண்பதும் கடைந்தெடுத்த பித்தலாட்டமாகும்.

நாக்கிலே பசை தடவி பூச்சி பிடிக்க அலைகிற விஷப்பல்லிகளின் இத்தகைய யுக்தி கழகத் தொண்டர்களிடமும் பலிக்காது, அறிவார்ந்த அன்னைத்தமிழ் பூமியிலும் முளைக்காது. கலை உலகம் ஓய்வு கொடுத்து அதற்குப் பிறகு எஞ்சிய காலத்தை அரசியலில் கழிக்கலாம் என்று நினைப்பவர்கள் எல்லோருமே மனிதப் புனிதராம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்ன் ஆட்சியை தருகிறோம் என்று சொல்கிறார்களே தவிர, ஒருவர் கூட கருணாநிதி ஆட்சி தருகிறோம் என்று பேச்சுக்கு கூட சொல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அதற்கான கூச்சம் ஏன் வந்தது?

அதிலும் குறிப்பாக பெண் வேஷம் போட்டுக்கொண்டு கருணாநிதியிடம் சென்று பாராட்டு பெறும் அளவுக்கு கோபாலபுரத்து கூர்காவாக தன்னைக் காட்டிக்கொண்ட கமலஹாசனும் கட்சி ஆரம்பித்து கருணாநிதியின் ஆட்சியை தருவேன் என்று சொல்லாமல், அவ்வை சண்முகம் சாலை தலைவனின் புகழ் உறிஞ்சி பிழைக்கலாம் என் மேற்படி அவ்வை சண்முகி நினைப்பது வெட்கக் கேடு அல்லவா?

எப்படியோ அடுத்த கட்சித் தலைவரின் புகழை தங்களுடையதாக்க நினைப்பதும், அண்டை வீட்டுக்காரரின் பெயரை அப்பாவுக்கு பதிலாக போட்டுக் கொள்வதும் அனேகமாக ஒன்றுதானே. என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த கட்டுரை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனேகமாக இதற்கு கமல்ஹாசனிடம் இருந்து ட்வீட் எதிர்பார்க்கலாம் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
 

Similar News