"தடுப்பூசி விவகாரத்தில் கோவையை புறக்கணிக்கிறது தி.மு.க. அரசு" - தலைவர்கள் குற்றச்சாட்டு..!

Update: 2021-05-22 10:44 GMT

தங்களுக்கு வாக்களிக்காத கோவை உட்பட கொங்கு மண்டலத்தின் அனைத்து பகுதிகளையும் தி.மு.க பழிவாங்குகிறது என்றும் இந்த பழி வாங்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் #DontBoycottCoimbatore என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூரில் நேற்று மட்டும் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3243ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் கோவையில் மட்டும் இதுவரை 29,345 பேர் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை அடுத்து தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது மாவட்டமாக கோவை மாறியுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 5913பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48782 ஆக உள்ளது.

தமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்றால் இரண்டாவது அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கோயமுத்தூரில் ‌மாநில அரசு மூலமாக ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசியின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று மொத்தம் 172 டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே கோவையில் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மே-15 முதல் மே-21 வரை மொத்தம் 4714 தடுப்பூசிகள் மட்டுமே தமிழக அரசு மூலம் வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக ஒரு தோற்றம் ஏற்பட்டாலும் மே 18 நிலவரப்படி, தமிழ்நாடு மொத்தம் 13,63,494 டோஸ் தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளது. மேலும் மே16 அன்று, மத்திய அரசிடமிருந்து 9,62,000 டோஸ் தடுப்பூசிகளை மாநில அரசு பெற்றிருந்தது.

இதனால் தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துக் கொண்டு இரண்டாவது அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டத்திற்கு தடுப்பூசி வழங்காமல் இருப்பது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் தி.மு.க அடைந்த படுதோல்விக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன், கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டத்தில் குறைவான தடுப்பூசி போடப்படுவதாகவும் இதனால் சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க-வின் செய்தி தொடர்பாளராக இருந்து வரும் S.G.சூர்யாவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 13 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருந்தும் கோவையில் ஒரு தடுப்பூசி கூட செலுத்தவில்லை என்று கண்டனம் தெரிவித்திருந்தார். இதன் மூலம் சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக-பாஜக கூட்டணியைத் தேர்ந்தெடுத்ததற்காக கோவை மக்களை ஆளும் கட்சி பழகவாங்குகிறதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதே போல் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட போஜராஜன், கோவை மற்றும் நீலகிரி மண்டலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீட்டில் துரோகம் செய்யும் தி.மு.க அரசு மீதான தனது கண்டனங்களை பதிவு செய்த அவர் கடந்த 3 நாட்களில் குன்னூர் அரசு மருத்துவமனையில் ஒரு தடுப்பூசி கூட செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக அரசு மருத்துவமனையை தினமும் தொடர்புகொண்டு கேட்கும் பொது அவர்கள் தங்களிடம் தடுப்பூசி இல்லை என்றும் மாநில அரசிடமிருந்து எங்களுக்கு தடுப்பூசி வரவில்லை என்றும் கூறுவதாக தெரிவித்தார்.

அதே போன்று பா.ஜ.க தமிழக துணைத் தலைவர் கே.அண்ணாமலையும் கோவையில் தடுப்பூசி குறைவாக செலுத்தப்படுவது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார். மே 10 முதல் கொங்கு பகுதியில் தடுப்பூசி குறைந்து வருவதாக அவர் கூறினார்.

மே-19 அன்று மாநிலத்தில் மொத்தமாக செலுத்தப்பட்ட தடுப்பூசியின் எண்ணிக்கை 36,199. மேற்கு பிராந்தியத்தின் 5 மாவட்டங்களில் (கோயம்புத்தூர், ஈரோட், நீலகிரி, சேலம், மற்றும் திருப்பூர்) மொத்த தடுப்பூசி வெறும் 2244. இது அந்த நாளில் மாநிலத்திற்கு செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசியில் 6% மட்டுமே. இதனால் இப்பகுதிகள் புறக்கணிக்கப்படுவது தெளிவாகக் தெரிகிறது." என்று கொங்கு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் குறித்து விளக்கியுள்ளார். மேலும் "இங்கு தி.மு.க படுதோல்வி அடைந்ததால் மக்களை பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறதா? இல்லை தவறான நிர்வாக முறையா?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தி.மு.க அரசு கோவையை புறக்கணிப்பதாக ட்விட்டரில் #DontBoycottCoimbatore

ஹேஷ்டேக் ட்ரண்டிங் செய்யப்பட்டு வருகிறது. அதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News