2 மணி நேர உண்ணாவிரதம் போல் இலங்கை விவகாரத்தில் அரசியல் வேண்டாம் - முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

Update: 2022-05-02 05:27 GMT

இலங்கைக்கு வழங்கும் உதவிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். 

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், 

இலங்கைக்கு அரிசி, மருந்து பொருட்கள் அனுப்புவோம் என்ற தமிழக அரசின் தீர்மானத்தை பாஜக உண்மையிலேயே வரவேற்கிறது. ஆனால் ஏற்கனவே மத்திய அரசு, இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. பல பில்லியன் டாலர் பொருளாதார உதவி, கச்சா எண்ணெய், அரிசி, மளிகைப் பொருட்கள், மருந்து பொருட்கள் என்று இலங்கைக்கு, மத்திய அரசு தொடர்ச்சியாக உதவி வருகிறது. 

2009 ஆம் ஆண்டில் இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திமுக எதையும் செய்யாமல் வேடிக்கை பார்த்தன. 2009 ஆம் ஆண்டில் 2 மணி நேர உண்ணாவிரதம் என்ற அரசியல் ஸ்டண்ட் மேற்கொண்டது போல், இப்போது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். இலங்கைக்கு உதவுவதாக இருப்பின், மத்திய அரசு வாயிலாகவே உதவ வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Similar News