தொடரும் நீட் அரசியல் : ஜீவித் குமாரை உண்மையிலேயே தத்தெடுத்தாரா சபரிமாலா?

தொடரும் நீட் அரசியல் : ஜீவித் குமாரை உண்மையிலேயே தத்தெடுத்தாரா சபரிமாலா?

Update: 2020-10-20 07:09 GMT

தேனியைச் சேர்ந்த அரசுப்‌பள்ளி மாணவர் ஜீவித் குமார் நீட் தேர்வில் 665 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு பல தரப்புகளில் இருந்தும்‌ பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இவரது தந்தை ஆடு வளர்ப்பிலும், தாய் 100 வேலைத் திட்டத்திலும் ஈடுபட்டுள்ள நிலையில் ஏழ்மை காரணமாக முதல் முறை அரசு பயிற்சி மையத்தில் பயின்ற போது இவரால் குறைந்த அளவு மதிப்பெண்களே எடுக்க முடிந்தது.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 548 மதிப்பெண்கள் எடுத்ததால் அவர்‌மீது நம்பிக்கை கொண்ட‌ அவரது பள்ளி ஆசிரியர்கள் இணைந்து நிதி திரட்டி தனியார் கோச்சிங் மையத்தில் சேர்த்துப் படிக்க வைத்ததாக பல ஊடகங்களிலும் அவர் தெரிவித்து இருந்தார்.

இதற்கு அனிதா என்ற‌ அரியலூர் மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட போது தனது அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த சபரிமாலா என்ற ஆசிரியையும் உதவியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஆசிரியை சபரிமாலா தான் ஜீவித் குமாருக்கு உதவியது பற்றி பல்வேறு விதமான கருத்துக்களை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். ஒரு முறை தான் நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஜீவித் குமாரைப் பார்த்த போதே‌ அவரது திறமையைப் பற்றி தெரிந்து கொண்டு ஊக்கப்படுத்தியதாகக் கூறி இருக்கிறார். இந்து தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியிலோ ஜீவித்தின் பள்ளி ஆசிரியர்கள் தன்னைத் தொடர்பு கொண்டு உதவி கோரியதாகக் கூறியுள்ளார்.

தான் செல்லும் இடங்களில் எல்லாம் ஜீவித் பற்றிப் பேசி நிதி திரட்டியதாக சபரிமாலா கூறியுள்ளார். ஆனால் மாணவருக்கு பெருமளவு உதவி புரிந்ததாகக் கூறப்படும் ஆங்கில ஆசிரியர் அருள் முருகனோ சபரிமாலாவுக்குத் தெரிந்த வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் ₹ 70,000 கொடுத்து உதவியதாகவும் மீதிப் பணத்தை ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து திரட்டியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் "ஜீவித் குமார் தேர்ச்சி பெறாமல் இருந்திருந்தால் எங்களின் குரல் யாருக்கும் கேட்டிருக்காது" என்பதால் அவரை கோச்சிங் மையத்தில் சேர்த்துப் படிக்க வைத்ததாகக் கூறிய அவர், நீட் பற்றி எதுவும் தெரியாததால் தான் தனியார் மையத்தில் சேர்த்துப் படிக்க வைத்ததாகவும் கூறி இருக்கிறார். விகடன் இதழிடம் "ஜீவித்குமாரின் வெற்றிக்குப் பின்னால், நிறைய நபர்களின் பங்களிப்பும், உழைப்பும் இருக்கிறது" என்றெல்லாம் கூறியுள்ள சபரிமாலா, தனது முகநூல் பக்கத்தில் 'தான் ஜீவித் குமாரைத் தத்தெடுத்துப் படிக்க வைத்ததாக' பேசி ஒரு‌ வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதற்கு மாணவர் ஜீவித் குமார் மறுப்பு தெரிவித்த செய்தி வெளியாகி உள்ளது. தனது தாய் தந்தையர் ஏழ்மையான சூழ்நிலையிலும் நீட் தேர்வுக்கு வெற்றி பெற தன்னை ஊக்கப்படுத்தியதாகவும் யாருக்கும் தன்னை தத்துக் கொடுக்கவில்லை என்றும் சில்வார்பட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் தனக்கு பெரிதும் உதவி புரிந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார். ஆ

சிரியை சபரிமாலா அரசியல் கட்சியினர் தன்னை மிரட்டியதாகவும் தன் பெற்றோர் தன்னை தத்து கொடுத்ததாகவும் முகநூலில் பதிவிட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ள ஜீவித் குமார் எந்த அரசியல் கட்சியினரும் தன்னை மிரட்டவில்லை என்றும் தனது தாய் தந்தை யாருக்கும் தன்னை தத்துக் கொடுக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும் சபரிமாலா தனது முகநூலில் பதிவிட்ட கருத்துக்கள் அனைத்தும் தவறானவை என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தி வேண்டுமென்றே நீட் எதிர்ப்பு அரசியலுக்காக சபரிமாலா மாணவருக்கு உதவி செய்தாரா என்றும் நீட் தேர்வு பற்றி தனக்கு தெரியாததால் தான் தனியார் மையத்தில் சேர்த்ததாக தன் வாயாலேயே ஒப்புக் கொண்ட அவர், நீட் தேர்வின் மீது பழி போட்டு அதனை எதிர்த்து தான் அரசு பணியை ராஜினாமா செய்வதாக கூறியது அனைத்தும் நாடகமா என்றும் சமூக ஊடகங்களில் சந்தேகம் எழுப்பப்படுகிறது.

Similar News