சர்ச்சையில் சிக்கிய 'இந்து எதிர்ப்பு' வலைத் தொடர்! அமேசான் ப்ரைம் அதிகாரிகளுக்கு அமைச்சகம் சம்மன்!

சர்ச்சையில் சிக்கிய 'இந்து எதிர்ப்பு' வலைத் தொடர்! அமேசான் ப்ரைம் அதிகாரிகளுக்கு அமைச்சகம் சம்மன்!

Update: 2021-01-18 08:56 GMT

இணையத் தொடரான 'தாண்டவ்' என்ற தொடரை சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்து விசாரிக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையால், அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர் என ANI செய்தி வெளியிட்டுள்ளது. 
 

அமேசான் ப்ரைம் சமீபத்தில் சைப் அலி கான் நடித்த அரசியல் நாடக தொடரான 'தாண்டவ்' என்ற தொடரை ஒளிபரப்பு செய்தது. அலி அப்பாஸ் ஜாபர் என்பவரின் தொடரான இது அமேசானில் வெளியிடப்பட்டு ஒரு நாள் கூட ஆகவில்லை, அது ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியது.

இந்தத் தொடருக்கு கடும் எதிர்ப்புகள் சமூக வலை தளங்களில் தொடர்ந்து வருகின்றது. இந்த நிகழ்ச்சியை பலரும் 'இந்து எதிர்ப்பு தொடர்' என்று குறிப்பிட்டுள்ளனர். 

இத்தகைய இணையதள தொடர்கள் மூலம், இந்து கடவுள்களையும் தெய்வங்களையும் கேலி செய்வது, இந்து சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளின் இடையே வேண்டுமென்றே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பது, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவது என நெட்டிசன்கள் பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதைத்தொடர்ந்து #BanTandav , #BoycottTandav போன்ற ஹாஷ்டாக்கள் வெளியாகத் தொடங்கின. சமூக ஊடகப் பயனர்கள், குறிப்பாக ஹிந்துக் கடவுள்களை மோசமான வெளிச்சத்தில் காண்பிக்கும் காட்சிகளை காட்டி அதுகுறித்து பொங்கி எழுந்தனர்.

இந்து கடவுள்களை கேலி செய்வதும், இந்திய காவல்துறையை முஸ்லிம்களுக்கு விரோதி என்று முத்திரை குத்துவதும், தாழ்த்தப்பட்டவர்களின் மீது மோசமான ஜாதி வெறி பேச்சுக்களைப் பேசுவதும் என நெட்டிசன்கள் பொங்குவதற்கு இங்கு நிறைய காரணங்கள் இருந்தன. 

 இது தொடர்பான ஆய்வுகளும் விவாதங்களும் டுவிட்டர் மற்றும் பிற சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பலர் தடை கோரினர். அவர்களில் பலர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை டேக் செய்தது மட்டுமல்லாமல் இந்துக்களுக்கு எதிரான தொடரை அமேசான் தளத்தில் இருந்து நீக்கும்படி கேட்டனர். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ராவும் ட்விட்டரில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரருக்கு இது தொடர்பாக மக்கள் மின்னஞ்சல் எழுத வேண்டும் என்றும் அமேசானில் வழங்கப்படும் ஆட்சேபகரமான உள்ளடக்கம் குறித்து அவருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களை வலியுறுத்தினார். 

இந்நிலையில் OTT தளங்களில் எந்தவிதமான சுயகட்டுப்பாடு, அரசு கட்டுப்பாடு இல்லாமல் போலி செய்திகளும், ஜாதி மத பிரச்சினையை தூண்டும் விவகாரங்களும் தொடர்ந்த எந்தவித தடையும் இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை குறித்து அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர்.

Similar News