1857 ஆம் ஆண்டு முதல் சுதந்திரம் அடைந்தது வரை பெண்களின் பங்களிப்பு: அரிதான பொக்கிஷமாக 18 கோடிக்கும் அதிகமான பக்கங்கள்!

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்கள் என்ற கண்காட்சியை மத்திய அமைச்சர் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் தொடங்கி வைத்தார்.

Update: 2023-03-13 00:39 GMT

இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் 133வது நிறுவன தினத்தை முன்னிட்டு புது டெல்லியில் உள்ள இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில், 'தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்கள்: 1857 முதல் குடியரசு வரை' என்ற கண்காட்சியை அர்ஜுன் ராம் மேக்வால் தொடங்கி வைத்தார். சுதந்திரப் போராட்டத்தில் தியாகம் செய்த அறியப்படாத வீரர்களின் நினைவுகளைப் போற்றுவதும் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய வீராங்கனைகளை முன்னிலைப்படுத்துவதும் பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணம் ஆகும். 1857 ஆம் ஆண்டு முதல் சுதந்திரம் அடைந்தது வரை தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் ஆற்றிய பங்களிப்பை இக்கண்காட்சி சுவாரஸ்யமாக எடுத்துக்காட்டுகிறது என்று அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார்.


துர்காவதி தேவி மற்றும் கஸ்தூர்பா காந்தி ஆகியோரின் உதாரணங்களை மேற்கோள் காட்டி அவர்களின் பங்களிப்பின் முக்கியமான மற்றும் அறியப்படாத அம்சங்களைக் கண்காட்சி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று திரு. அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் முயற்சியாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. அடக்குமுறை காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கான இந்தியாவின் போராட்டம், குழந்தைத் திருமணம் மற்றும் தீண்டாமை போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பது, பெண் கல்வியை எளிதாக்குவது, சுதந்திர இந்தியாவுக்கான அரசியலமைப்பை உருவாக்குவது போன்றவற்றில் எப்போதும் பெண்கள் முன்னணியில் இருந்துள்ளனர். முதல் இந்திய சுதந்திரப் போரில் இருந்து இந்திய குடியரசுப் பிரகடனம் வரையிலான பாதையில் அழிக்க முடியாத அளவில் பெண்கள் தடம் பதித்துள்ளனர்.


இந்திய தேசிய ஆவணக் காப்பகம் என்பது கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்ட அலுவலகமாகும். இந்தியக் குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட கோப்புகள், தொகுதிகள், வரைபடங்கள், மசோதாக்கள், ஒப்பந்தங்கள், அரிய கையெழுத்துப் பிரதிகள், ஓரியண்டல் பதிவுகள், தனியார் ஆவணங்கள், வரைபடப் பதிவுகள், அரசிதழ்கள் மற்றும் அரசிதழ்களின் முக்கியமான தொகுப்பு, மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பதிவுகள், சட்டசபை மற்றும் நாடாளுமன்ற விவாதங்கள் அடங்கிய பொதுப் பதிவுகளின் பக்கங்கள் இவற்றோடு தடைசெய்யப்பட்ட இலக்கியங்கள், பயணக் கணக்குகள் போன்ற 18 கோடிக்கும் அதிகமான பக்கங்கள் இந்திய தேசிய ஆவணக் காப்பகக் களஞ்சியங்களில் சேகரிக்கப் பட்டுள்ளன.

Input & Image courtesy: News

Tags:    

Similar News