டெல்லி மாநில அரசின் அதிகாரங்களை வரையறுக்கும் G.N.C.T.D மசோதா - தேவை என்ன?

Update: 2021-03-27 08:02 GMT

டெல்லி அரசாங்கத்தின் அதிகாரங்களை குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள GNCTD மசோதா, மார்ச் 17 அன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் (LG) இன் அனுமதி, மேற்பார்வை இல்லாமல் பல முடிவுகளை தன்னிச்சையாக டெல்லி அரசாங்கத்தால் இனி எடுக்க முடியாது.

இது டெல்லியின் நிர்வாக வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவாகும். இது அரசியலமைப்பின் கட்டமைப்பை கணிசமாக மாற்றியமைக்கிறது.

1991 க்கு முன்னர் டெல்லி அரசாங்கத்திற்கு என்ன அதிகாரம் இருந்ததோ, அது தான் தற்பொழுது திருப்பி அளிக்கப்பட்டிருக்கிறது. 1991க்கு பிறகுதான் டெல்லிக்கு ஒரு சட்டமன்ற அரசாங்கமும் நிர்வாக அதிகாரங்களும் கிடைத்தது. ஆனால் காவல்துறை, சட்ட ஒழுங்கு, நில நிர்வாகம் ஆகியவை மத்திய அரசிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த மசோதாவின் முக்கியமான காரணம் என்ன? ஒரு மாநில அரசின் வரம்பையும் மீறி, நாட்டின் தலைநகராக இருக்கும் டெல்லியை பொறுத்தவரை கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் மேலும் பல இருக்கின்றன.

டெல்லி மூன்றடுக்கு (முனிசிபல், சட்டமன்றம், பாராளுமன்றம்) அரசியல் நிர்வாகங்கள் பெருமளவிற்கு பெரியதா?

டெல்லி 1484 ஸ்கொயர் கிலோமீட்டர்களை கொண்டுள்ளது. இதில் 5 உள்ளூர் அமைப்புகள், அமைச்சரவையை கொண்ட முழு மாநில அரசாங்கம், ஒரு மத்திய அரசாங்கம். இத்தனையும் ஒரு சிறிய வட்டமான டெல்லிக்கு அதிகப்படியாகவே தோன்றுகிறது.

டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மொத்தம் 342 பேர் இருக்கிறார்கள். இதில் டெல்லியை பிரதிநிதிப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய எம்.பி-க்களும், மாநில எம்.எல்.ஏ-க்களும் கவுன்சிலர்களும் கார்ப்பொரேட்டர்களும் அடக்கம்.

சராசரியாக பார்த்தால் ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் பராமரிக்க 5 ஸ்கொயர் கிலோ மீட்டர் தான் உள்ளது. தாங்கள் ஓட்டளித்த மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு இரண்டு கிலோ மீட்டர் தினமும் நடைப்பயிற்சி செய்தால் கூட அனைவரையும் சந்தித்து அவருடைய பிரச்சினையை இவர்களால் எளிதாக கவனிக்க முடியும். ஆனால் பொதுவாக மக்களை சந்திப்பது அந்த அளவு விரிவான முறையில் நடத்தப்படுவதில்லை.

அப்படி இருக்கும் பொழுது இத்தனை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எதற்காக பொது நிதியை வீணடிக்க வேண்டும்?

2012ல் மறைந்த காங்கிரஸ் டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் 3 தனித்தனியான கார்ப்பரேஷன்களாக பிரித்தார். இது நிர்வாகத் திறனை கொஞ்சம்தான் அதிகரித்தது. ஆனால் அரசியல் மற்றும் அதிகார பதவிகளை நிரப்புவதற்கு நிறைய இடம் கிடைத்தது.

தற்பொழுது மூன்று முனிசிபல் கார்ப்பரேஷன்களும் பா.ஜ.க கையில் உள்ளது. மாநில அரசு ஆம் ஆத்மி கட்சி கையில் உள்ளது. டெல்லி அதிகபட்சமாக ஒரு மிகப்பெரிய முனிசிபாலிட்டி போல் நிர்வாகப்படுத்தப்படலாம்.

அதிலிருக்கும் 20 மில்லியன் மக்களுக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மேயர். இதுதான் பல மாநிலங்களில் உள்ள நடைமுறையாகும். குறைந்தபட்ச காற்றுத் தரம், தண்ணீர் வினியோகம், பொதுப் போக்குவரத்து, பொது சுகாதார வசதிகள் ஆகியவற்றை கையாள ஒரு மேயர் பதவியே போதுமானது.

ஆனால் இந்திய அரசியலில் ஒரு பெரிய முனிசிபாலிட்டி மேயர் போல தலைமை தாங்குவது ஒரு மாநில அரசின் அமைச்சராக இருப்பதற்கு ஈடாகாது என கருதப்படுகிறது. இந்த மனநிலை மாற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

மிகப் பெரிய நகரங்களின் மேயர்களுக்கு அதிகபட்ச அதிகாரங்கள் வழங்கப்பட்டு பொதுமக்கள் பயன் தரும் வகையில் அமைக்கப்பட வேண்டும். முனிசிபல் பணியாளர்கள் உள்ளூர் அளவில் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டு அதிக காலம் பணியில் தங்க வைக்கப்படவேண்டும்.

2040ல்இந்தியாவின் மக்கள் தொகையில் பாதியை நகரங்கள் கொண்டிருக்கும். மத்திய அரசாங்கமும் டெல்லி அரசாங்கமும் இனைந்து செயல்படுவதற்கு டெல்லியில் போதுமான அளவு இடம் இல்லை.

டெல்லி மறுபடியும் ஒரு பெரிய நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முனிசிபல் கார்ப்பரேஷன் ஆக மாறுவது நாட்டிற்கும், டெல்லிக்கும் நல்லது.

டெல்லி போலீஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கொண்டாலும், கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசாங்க வக்கீல்கள் நியமிப்பது வாதாடுவது டெல்லி அரசாங்கத்தின் கையில் இருக்கிறது.

ஜனவரி 26 கலவரம், கடந்த வருடம் நடந்த டெல்லி கலவரத்திற்குப் பிறகு டெல்லி போலீஸார் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு கொண்டு வந்தாலும், டெல்லி அரசாங்கத்தின் அரசாங்க வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் சரியான முறையில் வாதாடுவது இல்லை போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

டெல்லி போலீசாரின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு டெல்லி அரசு நடந்து கொள்வதில்லை என்ற புகார் அடிக்கடி எழுந்து வந்த நிலையில், நாட்டின் தலைநகரின் சட்ட ஒழுங்கை சரியான முறையில் பராமரிக்க இரட்டை அதிகாரங்களும் லெப்டினன்ட் கவர்னர் கையில் இருப்பதே நல்லது என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது. 

Tags:    

Similar News