கமலா ஹாரீஸ் இந்திய வம்சாவளி, ஜோ பைடனின் இந்திய தொடர்பு பற்றி தெரியுமா?
கமலா ஹாரீஸ் இந்திய வம்சாவளி, ஜோ பைடனின் இந்திய தொடர்பு பற்றி தெரியுமா?
அமெரிக்க தேர்தலில் நீடித்த குழப்பங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான ஜோ பைடனும் கமலா ஹாரிசும் முறையே அதிபராகவும் துணை அதிபராகவும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் தன்னுடைய பூர்வீகம் பற்றியும் தனது தாத்தாவுடன் சென்னை கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டதைப் பற்றியும் உணர்ச்சிப் பூர்வமாகப் பேசி இந்தியர்களிடையே ஓட்டு சேகரித்தது நினைவு கூரத்தக்கது. அதிபர் ஜோ பிடனுக்கும் கூட இப்படி ஒரு பின்னணி இருக்கக் கூடும் என்று இப்போது தெரிய வந்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முறையாக தனக்கு இந்தியாவுடன் இருக்கும் தொடர்பு பற்றி குறிப்பிட்ட ஜோ பைடன் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நான்கு தலைமுறைக்கு முன் ஜார்ஜ் பைடன் என்ற தனது முன்னோர் ஒருவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பல் ஒன்றில் கேப்டனாக பணிபுரிந்த போது இந்தியா வந்து இந்தியப் பெண்மணி ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு இங்கேயே வசித்த நிகழ்வு பற்றி குறிப்பிட்டார்.இந்தியாவில் ஜார்ஜ் பைடன் என்ற பெயரில் ஒருவர் இருந்ததற்கான எந்த ஆவணமும் இல்லை என்றாலும் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆவணங்களில் பைடன் என்ற பெயரில் இருவர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சகோதரர்கள். அவர்கள் இருவருமே லண்டன் மற்றும் இந்தியா இடையிலான கப்பல்களில் சாதாரண பணியாளர்களாக தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
அதில் வில்லியம் ஹென்றி பைடன் என்ற சகோதரர் மிடாஸ் என்ற கப்பலில் தனது தொழில் வாழ்க்கையைத் துவக்கினார். 1843ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று பக்கவாதத்தால் தனது 51வது வயதில் அப்போது ரங்கூன் என்று அறியப்பட்ட பகுதியில் உயிரிழந்தார். அதற்கு முன் அன்னா ராபர்ட்சன், கங்கா மற்றும் தாலியா உள்ளிட்ட கப்பல்களுக்கு கேப்டனாக பணியாற்றி இருக்கிறார்.
இவை ஆசிய கடல்பகுதிகளில் மட்டுமே வியாபாரத்தில் ஈடுபட்ட சிறிய அளவிலான கப்பல்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இவரது மூத்த சகோதரர் கிறிஸ்டோபர் பைடன் அந்தக் கால மதராசில் பலரும் அறிந்த நபராக இருந்திருக்கிறார்.