பூஜ்ஜியத்தை பயன்படுத்திய உலகின் பழமையான இந்தியச் சுவடுகள் - ஆக்ஸ்ஃபோர்டில் இருந்து இந்தியா வருமா.?
பூஜ்ஜியத்தை பயன்படுத்திய உலகின் பழமையான இந்தியச் சுவடுகள் - ஆக்ஸ்ஃபோர்டில் இருந்து இந்தியா வருமா.?
பூஜ்ஜியம் பழங்கால இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தியர்கள் பூஜ்ஜியத்துக்கு என்று ஒரு வடிவத்தைப் பயன்படுத்தியதும், அதை எண்களின் மதிப்புகளைக் குறிப்பிடப் பயன்படுத்தியதையும் பற்றி பலருக்கும் தெரியாது.
முதலில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோவிலில் அமைந்துள்ள 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் பூஜ்ஜியத்தைக் குறிப்பிட '.', அதாவது புள்ளியைப் பயன்படுத்தியது தான் உலகத்திலேயே பழமையானது என்று கருதப்பட்டது.
ஆனால் 1881ல் தற்போதைய பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள பக்ஷாலி என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட ஏடுகளில் இருந்து, பூஜ்ஜியத்தைக் குறிப்பிட புள்ளியை 3வது நூற்றாண்டில் இருந்தே பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
கிட்டத்தட்ட 70 சுவடுகளைக் கொண்டுள்ள பக்ஷாலி ஏடுகள் 3ஆம் நூற்றாண்டு முதல் 7ஆம் நூற்றாண்டு வரையிலான வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு இருக்கக் கூடும் என்று கார்பன் டேட்டிங் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
காஷ்மீரிகளின் சாரதா எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்த சுவடுகள், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் A.F.Rudolph Hoernlé என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டன. இவர் ஒரு ஜெர்மன் மிஷனரி தம்பதியரின் மகன்.
இவர் மொழிபெயர்ப்பதற்காக எடுத்துச் சென்ற பக்ஷாலி ஏடுகள் இன்று வரை இங்கிலாந்தில் தான் உள்ளன. இவற்றை இந்தியாவிற்கு திருப்பி அளிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.