"நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது" குடுகுடுப்புக்காரரை வைத்து பிரச்சாரத்தில் இறங்கிய தி.மு.க'வினர் !
"நல்ல காலம் பிறக்கபோகுது நல்ல காலம் பிறக்க போகுது, உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போட்டா இந்த நகரத்துக்கு நல்ல காலம் பிறக்கபோகுது ' என்று ஒரு குடுகுடுப்பைக்காரரை வைத்து தி.மு.க, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறது.
எதிர்வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை இறக்கி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் எப்போதும் வினோதமான புதிய வியூகங்களை வகுப்பர்.தி.மு.க'வோ இந்த விஷயத்தில் மகா கெட்டிக்காரர்கள். தேர்தல் என்று வந்துவிட்டால் வாக்காளர்களை கவர என்னவிதமான யூக்திகளைக் கூட கையாள்வார்கள். அந்தவகையில் வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் நகராட்சியில் குடுகுடுப்புக்காரர் ஒருவரை வைத்து, அப்பகுதி தி.மு.க'வினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
"நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது மு.க ஸ்டாலின் முதல் அமைச்சராக இருக்கிறார் நல்ல காலம் பிறக்குது, உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போட்டா இந்த நகரத்துக்கு நல்ல காலம் பிறக்கபோகுது" என்று அந்த குடுகுடுப்புக்காரர் தி.மு.க'வுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இறைமறுப்பாளர்கள், பகுத்தறிவு சிந்தனையாளர்கள் போன்ற கருத்தாக்கங்களை முன்நிறுத்தி வளர்ந்த இயக்கம் தற்பொழுது பல சூழ்நிலைகளில் தடம்மாறி செல்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சென்ற வருடம் நடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க பிரச்சார யூக்தியாக மு.க ஸ்டாலின் அவர்கள் கையில் "வேல்" ஏந்தியதே ஒரு தக்க உதாரணமாகும்.
இந்நிலையில் குடுகுடுப்புக்காரரை வைத்து பிரச்சாரம் செய்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.