அர்ச்சகர் நியமனத்தில் அரசு தலையீடு - அறநிலையத்துறையின் ஆட்டத்தை அடக்கிய நீதிமன்றத்தின் உத்தரவு!

Update: 2022-08-24 02:27 GMT

அறநிலையத் துறை கோவில் ஊழியர்கள் பணி விதிகளை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு ஏற்படுத்தியது. அதில், கோவில்களில் அர்ச்சகர் உள்ளிட்ட பணியாளர்களை நியமிக்க தகுதிகள் வரையறை செய்யப்பட்டன. குறிப்பிட்ட சில விதிகளை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.ஆகம விதிகளை, சடங்குகளை புறக்கணித்து விதிகள் வகுக்கப்பட்டு இருப்பதாகவும், இதை பின்பற்றி, ஆகமப்படியான கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்க முடியாது எனவும், மனுக்களில் கூறப்பட்டது.

இம்மனுக்கள், விசாரணைக்கு வந்தன. ஆகம விதிகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ள கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அர்ச்சகர் நியமனங்களை மேற்கொள்ள, அறங்காவலர்களுக்கு தான் உரிமை உள்ளது என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அறங்காவலர்கள் இல்லாதபோது, கோவில் செயல்பாடுகளை ஒருவர் கவனிக்க வேண்டும்.

ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை பொறுத்தவரை, ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் சேஷம்மாள் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தான் அமல்படுத்த வேண்டும்.எனவே, ஆகம விதிகளின்படியான கோவில்களுக்கு, ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க முடியும். அறங்காவலர்கள் அல்லது தக்கார் தான் அர்ச்சகரை நியமிக்க முடியும்; அறநிலையத் துறை அல்ல. ஆகமப்படி அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை என்றால், தனிநபர் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம்.ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களை அடையாளம் காண வேண்டியதுள்ளது.

எந்த ஆகமப்படி கட்டப்பட்டுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்.எனவே, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சொக்கலிங்கம் தலைமையில் ஐவர் குழுவை நியமிக்க, அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. குழுவில், சென்னை சமஸ்கிருத கல்லுாரி நிர்வாக குழு தலைவர் என்.கோபாலசாமி இடம்பெற வேண்டும்.தலைவரின் ஆலோசனையுடன், ஒரு மாதத்துக்குள், இரு உறுப்பினர்களை அரசு நியமிக்க வேண்டும்.

அலுவல்சாரா உறுப்பினராக அறநிலையத் துறை கமிஷனர் இருக்க வேண்டும்.இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. 



Similar News