காவேரி கூக்குரல் சார்பில் தொண்டாமுத்தூரில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்! விவசாயிகள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்!
காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் 'பசுமை தொண்டாமுத்தூர்' திட்டம் இன்று (ஆகஸ்ட் 3) தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள 60 கிராமங்களில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக தேக்கு, செம்மரம், மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற உயர் மதிப்புமிக்க டிம்பர் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் பணியாளர்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் விவசாயிகளை நேரில் சந்தித்து நிலத்தின் மண் மற்றும் நீரின் தன்மையை ஆராய்ந்து மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரைக்க உள்ளனர். தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகள் டிம்பர் மரக்கன்றுகளை இலவசமாக பெற்று கொள்ள 93429 76519, 95004 77437 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இத்திட்டத்தின் தொடக்க விழா தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அட்டுக்கல் கிராமத்தில் உள்ள கே.வி.ஆர். தோட்டத்தில் இன்று நடைபெற்றது. இதில் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட கவர்னர் திரு. ராஜ்மோகன் நாயர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், "எங்களுடைய ரோட்டரி சங்கத்தின் 'கோ க்ரீன்' என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில், காவேரி கூக்குரல் இயக்கத்துடன் இணைந்து 'பசுமை தொண்டாமுத்தூர்' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தின் கீழ் 1 லட்சம் டிம்பர் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளோம் . முதல் இரண்டு நாட்களிலேயே சுமார் 15,000 மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது " என்றார்.