கோவை அருகே ரயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் மரணம்.!

கோவை அருகே ரயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் மரணம்.!

Update: 2021-02-04 15:36 GMT

கோவை அருகே தேர்வு எழுது சென்ற மாணவர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிவா 22, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பவித்ரன் 22, ஆகிய மாணவர்கள் கோவை, மயிலேரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த இரண்டு மாணவர்களும் கல்லூரி அருகே தனியாக அறை எடுத்து தங்கி படித்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக 2 மாணவர்களும் தங்களது சொந்த ஊர் சென்றுவிட்டு தற்போது அரியர் தேர்வு நடப்பதால் அதனை எழுதுவதற்காக கோவை வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் பவித்ரன், சிவா மற்றும் மற்றொரு நண்பருடன் ஹோப் காலேஜ் ரயில்வே பாதை வழியாக சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பவித்ரனும், சிவா என்ற 2 மாணவர்களும் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றதாகவும் மற்றொரு மாணவன் அருகில் நடந்து கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது அவர்களுக்குப் பின்னால் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிவா மற்றும் பவித்ரன் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் தண்டவாளத்திற்கு அருகாமையில் சென்ற மாணவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 கல்லூரி மாணவர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News