தருமபுர ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்வில் ஆதீனத்தைப் பல்லக்கில் தூக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது என திராவிடர் கழகத்தினர் மனு அளிக்க, அந்த மனுவின் அடிப்படையில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து நோட்டீஸ் அனுப்பியது.
இதனையடுத்து ஆதீன மடங்களின் மடாதிபதிகள், இந்து அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "நானே முன்னின்று தருமபுர ஆதீனத்தைப் பல்லக்கில் தூக்குவேன். பாஜக நடத்திக்காட்டும்" என்றார்.
மயிலம் பொம்மாபுரம் ஆதீனம், கோவை பேரூர் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்கள். பிறகு பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு விதித்த தடையைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதே போல மதுரை மருத்துவக் கல்லூரியில் சம்ஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்றதாக எழுந்த புகாரில் எந்த விசாரணையும் நடத்தாமல் டீன் ரத்தினவேல் மீது ஏப்ரல் 1-ம் தேதி நடவடிக்கை எடுத்தது தமிழக அரசு.
இதனையடுத்து ஏற்கெனவே தமிழகத்திலுள்ள பல மருத்துவக் கல்லூரிகளில் சம்ஸ்கிருத உறுதி மொழி ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்ட தகவலும் வெளியில் வந்தது. டீன் ரத்தினவேலுக்கு அனைத்துத் தரப்பிலும் ஆதரவு குவிந்தது. அவர்மீது எந்தக் குற்றச்சாட்டையும் வைக்க முடியாத நிலையில், மீண்டும் அவரை மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக நியமித்து உத்தரவிட்டது.
Inputs From: Vikadan