கார்களில் உள்ள பம்பர் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும்.. தலைமைச் செயலாளர் அவசர உத்தரவு.!

கார்களில் உள்ள பம்பர் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும்.. தலைமைச் செயலாளர் அவசர உத்தரவு.!

Update: 2020-12-27 07:54 GMT

அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ‘கிராஸ் பார்’ (பம்பர்) கம்பிகளை உடனடியாக அகற்றவேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, முதலமைச்சர் அலுவலகம், அனைத்து அமைச்சர்களின் சிறப்பு தனி உதவியாளர்கள், அரசு செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

வாகனங்களில் ‘கிராஸ் பார்’ என்கின்ற பம்பர் கம்பிகளை அகற்றுவது தொடர்பாக கடந்த நவம்பர் 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதில் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ‘கிராஸ் பார்’ கம்பிகளை அகற்றுவதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்.

குறிப்பாக மிக மிக முக்கியமானவர்கள் மற்றும் மிக முக்கிய நபர்கள் மற்றும் மற்ற வாகனங்களில் இந்த ‘கிராஸ் பார்’ கம்பிகளை அகற்றுவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அந்த மனுவில் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தவிர மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு ஒன்றில், ‘கிராஸ் பார்’ என்ற கம்பிகளை வாகனங்களில் பொருத்துவது மோட்டார் வாகன சட்டத்தின் 52-ம் பிரிவுக்கு முரணாக உள்ளது என்றும், அப்படி பொருத்துவது அபராதத்துக்கு உட்பட்டது என்றும், அங்கீகாரமற்ற இதுபோன்ற ‘கிராஸ் பார்’ கம்பிகளை பொருத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே, ‘கிராஸ் பார்கள்’ போன்ற அங்கீகாரமற்ற பொருட்களை பொருத்துவது, சாலையில் நடந்து போகிறவர்கள் மற்றும் வாகனங்களில் பயணிப்போரின் பாதுகாப்புக்கு கடுமையான பாதகமாக உள்ளது என்று கருதப்படுகிறது.

எனவே, மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் வாகனங்களில் இதுபோன்ற அங்கீகாரமற்ற பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்வதோடு, அங்கீகாரமில்லாத ‘கிராஸ் பார்’ போன்ற பொருட்கள் அரசு வாகனங்களில் அகற்றப்பட்டுவிட்டதா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News