கூட்ட நெரிசல்.. நேரமானதால் அரசு விழாவிற்கு லிப்ட் கேட்டு ‘டூவீலரில்’ சென்ற அதிகாரி.!
கூட்ட நெரிசல்.. நேரமானதால் அரசு விழாவிற்கு லிப்ட் கேட்டு ‘டூவீலரில்’ சென்ற அதிகாரி.!
அரசு விழாவிற்கு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் இருசக்கர வாகத்தில் உதவி கேட்டு வந்த சம்பவம் அனைத்து அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலை வழியாக இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழாவிற்கு நேரமானதால் காரைவிட்டு இறங்கியுள்ளார் ராதாகிருஷ்ணன்.
அப்போது அவ்வழியே சென்ற இளைஞர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார். தன்னை தண்டையார் பேட்டை மருத்துவமனையில இறக்கிவிடுமாறு கூறியுள்ளார். அந்த இளைஞரும் சரி என்று மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டுள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் இருசக்கர வாகனத்தில் வருவதை கண்ட மற்ற அதிகாரிகள் ஆச்சரியத்தில் இருந்துள்ளனர். உடனடியாக விழாவிற்கு சென்றுள்ளார்.
இது குறித்து உதவி கொடுத்த திருவொற்றியூரை சேர்ந்த பிரபு என்ற இளைஞர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரை தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன். அவர் அரசு அதிகாரியாக இருந்த போதிலும் தனக்கு உதவி கொடுப்பீர்களா என்றார். இதனையடுத்து நான் சரி என்று சொன்ன பிறகுதான் வாகனத்தில் ஏறினார். அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அவருக்கு அவசரமாக நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றதால் காத்திருந்த அவருடன் செல்பி எடுத்து கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பொறுப்பில் உயர் அதிகாரியாக இருப்பவர் இரண்டு சக்கர வாகனத்தில் வருவது மற்ற அதிகாரிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கியுள்ளார் என்று பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.