தமிழகத்தில் முட்டை விலை குறைவு.. ஏன் தெரியுமா.!

தமிழகத்தில் முட்டை விலை குறைவு.. ஏன் தெரியுமா.!

Update: 2021-01-07 09:33 GMT

கேரளாவில் தற்போது கோழிகளால் பறவைக்காய்ச்சல் பரவி வருவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில் நாமக்கல் கோழிப் பண்ணைகளில் முட்டை விலை குறைந்துள்ளது. ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் கடந்த ஒரு வாரமாக கோழிகள் மற்றும் வாத்துக்கள் மூலமாக பறவைக்காய்ச்சல் பரவுவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில் தொடங்கிய பரவைக்காய்ச்சல் காரணமாக தென்மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநில எல்லைகளில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதன் பின்னரே தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில எல்லைகளில் சரக்கு வாகனங்கள் நுழைவதற்கு போலீசார் அனுமதி அளிக்கின்றனர்.

மேலும், பரவைக் காய்ச்சலை கேரள அரசு பேரிடராக அறிவித்துள்ளது. அதே போன்று தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் இருக்க கேரளாவில் இருந்து கோழி, வாத்துக்களின் முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், பறவைக் காய்ச்சல் எதிரொலியால் நாமக்கல் பண்ணைகளில் முட்டை விலை 25 காசு குறைந்து ரூ.4.85 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 5.10 விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டை விலை உயர்ந்தது. இதனால் நாமக்கல்லில் உள்ள பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது பறவைக் காய்ச்சல் காரணமாக விலை குறைந்துள்ளது பண்ணையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பறவைக்காய்ச்சல் இருந்த போதிலும் தமிழகத்தில் பல இடங்களில் உள்ள இறைச்சி கடைகளில் கூட்டம் எப்பவும் போன்று உள்ளது.

Similar News