ஏலக்காய் வியாபாரிகளுக்கு போலி ரசீது.. பல கோடி சுருட்டிய நிறுவனம்.!

ஏலக்காய் வியாபாரிகளுக்கு போலி ரசீது.. பல கோடி சுருட்டிய நிறுவனம்.!

Update: 2020-12-19 11:57 GMT

தேனியில் போலி ரசீது மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக தனியார் ஏலக்காய் விற்பனை நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் விளையும் ஏலக்காய்கள் இந்திய நறுமண வாரியத்தின் வழியாக விற்கப்படுகிறது. நறுமண வாரியத்துக்கு விவசாயிகள் கொண்டுவரும் ஏலக்காயைத் தரம் வாரியாக பிரித்து மின்னணு மூலம் ஏலம் நடைபெறுவது வழக்கம். இது தவிர தனியார் ஏலக்காய் விற்பனை நிலையங்களும் இந்தப் பகுதியில் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற தனியார் ஏலக்காய் விற்பனை நிறுவனம் ஒன்றியல் போலி ரசீது தயாரித்து கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போடிநாயக்கனூர் புது காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஏலக்காய் விற்பனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த விற்பனை நிலையத்தின் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார், கேரளாவைச் சேர்ந்த தியாகராஜன்.

இந்த விற்பனை நிலையத்துக்கு கொண்டுவரப்படும் ஏலக்காய்களை வாங்கிக் கொண்டு அதற்கான கிராஃப்ட் ரசீது பெற்று, அந்த ரசீதின் மூலம் பைனான்சியர்களிடம் கடன் பெற்று விவசாயிகளுக்குக் கொடுப்பர். பின்னர் பைனான்சியர்களுக்கு 2 சதவிகிதம் கமிஷன் தொகையுடன் அந்தப் பணம் திரும்பக் கொடுக்கப்படும்.

இது போன்ற முறையில் வடிவேல் என்பவரிடம் வெவ்வேறு தேதிகளில் ஏலம் விடப்பட்ட 1500 கிலோ ஏலக்காய்களுக்கான கிராஃப்ட் ரசீதை வழங்கி 48 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதே போன்று பல விவசாயிகளிடம் இரண்டு கோடிக்கும் மேல் கிராப்ட் ரசீது மூலம் கடன் பெற்றுள்ளனர்.

வருடக்கணக்கில் ஆகியும் பணத்தைத் திரும்பத் தராததால், ஆறுமுகம் மீது வடிவேலு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஆறுமுகம், அவரது மனைவி, மகன் மற்றும் மேலாளர் தியாராஜன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தேனி விவசாயிகள் மட்டுமின்றி கேரளா விவசாயிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Similar News