சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு.. நீலகிரியில் கடும் போக்குவரத்து நெரிசல்.!

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு.. நீலகிரியில் கடும் போக்குவரத்து நெரிசல்.!

Update: 2020-12-27 17:01 GMT

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. இருந்த போதிலும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நீலகிரியானது சுற்றுலா மாவட்டம் என்பதால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருவதற்கு இ பாஸ் நடைமுறையில் உள்ளது. 
தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

மேலும் சனி, ஞாயிறு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறையால் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி, குன்னூர் பகுதிக்கு படையெடுத்து வருவதை காணமுடிகிறது. இதனால் சுற்றுலா தலங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து புத்தாண்டு வரை சுற்றுலா பயணிகள் அதிகளவு ஊட்டிக்கு படையெடுப்பது வழக்கம்.

தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் உள்ளதால் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி சுற்றுலா தலங்களை பயணிகள் கண்டு களித்து வருகின்றனர். இதனால் தங்கும் விடுதிகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.

புத்தாண்டு கொண்டாடவும், டிசம்பர் மாத பனிப்பொழிவை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டு இருக்கின்றனர். இதனால் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி பர்லியாறு, குன்னூர், கோத்தகிரி மற்றும் ஊட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவு சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஏராளமான வாகனங்கள் ஊட்டிக்கு செல்கிறது. இதனால் ஊட்டியில் உள்ள ஹில்பங்க், சேரிங்கிராஸ், தொட்டபெட்டா உட்பட அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் ஆங்காங்கே சில நிமிடங்கள் அணிவகுத்து நிற்பதை காண முடிகிறது. 

போக்குவரத்து நெரிசல் ஒரு பக்கம் இருந்தாலும், ஊட்டியில் உள்ள தொழிலாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். பழைய மாதிரி தங்களின் வியாபாராம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று கூறலாம்.

Similar News