கிருஷ்ணகிரி: லாரி மோதி படுகாயமடைந்த யானை உயிரிழப்பு.!

கிருஷ்ணகிரி: லாரி மோதி படுகாயமடைந்த யானை உயிரிழப்பு.!

Update: 2021-01-17 16:07 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சரக்கு லாரி மோதியதில் படுகாயம் அடைந்த யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வனத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சரக்கு லாரி ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி பேரண்டப்பள்ளி வனப்பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது அந்த சரக்கு லாரி மோதியது. இதில் யானை கொஞ்சம் தூரம் தள்ளப்பட்டு கீழே விழுந்து கிடந்தது. இதில் யானையின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த விபத்தால் ஒசூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 5 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், கிரேன் மூலம் யானையைத் தூக்கி லாரியில் வைத்து தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூருக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனிடையே பெங்களூரு பன்னரகட்டா வன உயிரியல் பூங்கா மருத்துவர் குழுவினர் வந்து யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், யானையின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அதனால் நிற்க முடியாத சூழல் ஏற்பட்டது. உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக யானை உயிரிழந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரக்கு லாரி டிரைவர் சோலைமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

Similar News