தமிழக அரசு அறிவிப்பு! மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் 27ம் தேதி திறப்பு!

தமிழக அரசு அறிவிப்பு! மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் 27ம் தேதி திறப்பு!

Update: 2021-01-19 19:21 GMT

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் வருகின்ற ஜனவரி 27ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு தமிழக அரசு ரூ.80 கோடி மதிப்பீட்டில் பீனிக்ஸ் பறவை போன்ற நினைவிடம் அமைத்துள்ளது. தற்போது அந்த பணிகள் அனைத்தும் முடிவுபெற்றுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை 27.01.2021 புதன்கிழமை காலை 11 மணியளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையேற்று திறந்து வைக்க உள்ளார்கள்.

மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலை வகிப்பார்கள். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு சட்டப்பேரவை துணைத்தலைவர், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Similar News