பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு, தருமபுர ஆதீனம் மடத்தில் பல்லக்கு சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. கோட்டாட்சியர் பிறப்பித்த தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை வரவேற்றுள்ள மதுரை ஆதீனம மடம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியது.
இது குறித்து கருத்து தெரிவித்த, மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், எனக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வருகிறது. அதற்கு பின்னால் அரசியல் பின்புலம் உள்ளது. இது யாருக்கும் அடிபணியாத அரசு என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். அவர் சொல்வதை வைத்து பார்த்தால் அடுத்த ஆண்டு தருமபுரம் ஆதீனம் மடத்தில் பல்லக்கு சேவை நடக்குமா? என்பது சந்தேகம். அது பற்றி அப்போது பார்த்துக் கொள்ளலாம்.
என்னை தருமபுரம் கோவிலுக்கு வரக்கூடாது என மிரட்டுகிறார்கள். இதனை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். எனக்கு கோவில்களில் அன்னதானம் வழங்க திரைமறைவில் தடை விதிக்கப்படுகிறது. கோவில் நிர்வாகம் ஒத்துழைப்பு தருவதில்லை.
தமிழகத்தில் பிரபல கோவில்களில் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் நான் தொடர்ந்து உறுதியாக உள்ளேன். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே மத்திய அரசு எனக்கு பாதுகாப்பு தரும் என்று நம்புகிறேன் என்று கோரிக்கை விடுத்தார்.
Inputs From: Maalaimalar