மதுரை சித்திரைத் திருவிழாவில் யாருடைய அலட்சியத்தால் இத்தனை குளறுபடிகள்?
மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் இருவர் மரணமடைந்து, 12 பேர் காயமடைந்தனர். இதற்கு முழுக் காரணம் மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியமே என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டார்கள். அதற்கு ஏற்ப முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை. கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்ச்சியில் இதுவரை அசம்பாவிதம் நடந்ததில்லை. ஆனால் இந்த முறை மோசமான சம்பவம் நடந்துவிட்டது.
காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த மரபுகள் மீறப்பட்டன. பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. பணம் செலுத்திய மண்டகப்படிகளுக்கு கள்ளழகர் செல்லவில்லை. இதனால் தரிசிக்க காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பின்தொடர்ந்து மொத்தமாகச் சென்றதால் இந்த விபத்து நடந்துள்ளது.
3,000 போலீஸ் பாதுகாப்புக்கு இருந்தார்கள். ஆனாலும் நெரிசலில் இருவர் பலியாகிவிட்டனர். போலீஸ் மக்களுக்குப் பாதுகாப்புத் தருவதைவிட்டு விழாவுக்கு வந்த வி.ஐ.பி-க்களையும், அவர்களின் குடும்பத்தினரைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியதும் விபத்து ஏற்பட முக்கியக் காரணம் என்கிறார்கள்.
மக்கள் வந்து செல்ல வழக்கத்தில் இருந்த பாதைகளை அடைத்துவிட்டனர். அதனால் கூட்டம் ஒரே இடத்தில் அடைக்கப்பட்டு முன்னேறி சென்றது. பொதுமக்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் பட்டாபிஷேகம், திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் விஐபி-களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இது தவிர, அழகர் கோயில் நிர்வாகம் மீது பல புகார்கள் உள்ளது. நிர்வாக குளறுபடியால் கள்ளழகர் புறப்பட ஒன்றரை மணி நேரம் தாமதமானது. தாமதமாக கிளம்பியதால் மண்டகப்படியில் கள்ளழகர் நிற்காமல் சென்றதால்தான் காத்திருந்த மக்கள் அதிர்ச்சியாகி சாமிக்குப் பின்னால் ஓட கூட்டம் கட்டுங்கடங்காமல் நெரிசலானது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
Input From: Vikadan