திருவாரூரில் 324 மகளிர் குழுவுக்கு ரூ.78 லட்சம் கடனுதவி வழங்கிய அமைச்சர்.!

திருவாரூரில் 324 மகளிர் குழுவுக்கு ரூ.78 லட்சம் கடனுதவி வழங்கிய அமைச்சர்.!

Update: 2020-12-26 16:50 GMT

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பனங்குடி, ஆனைக்குப்பம், திருவாஞ்சியம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு நேரடி வங்கிக்கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 324 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.78 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான வங்கி கடனுதவியை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் வழங்கினார்.

இதன் பின்னர் அவர் பேசியதாவது: மகளிர் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் நலன் காக்கின்ற வகையிலும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய பல்வேறு சிறப்பு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் குறிப்பாக தொட்டில் குழந்தைககள் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், இந்தியாவிலேயே முதன் முதலாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், அனைத்து மகளிர் அதிரடிப்படை, அனைத்து மகளிர் காவல் படை, தாயின் முதலெழுத்தை குழந்தையின் தலைப்பெழுத்தாக பயன்படுத்துதல், மகளிருக்கு பெருமை சேர்க்கும் வகையில் “குடிமகள் என்னும் சொல்லை பயன்படுத்துதல், வீரதீர பெண்மணிக்கு “கல்பனா சாவ்லா விருது”  ஏழைப்பெண்களின் திருமணத்திற்காக பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கு 50,000 ரூபாய் திருமண நிதி உதவித்தொகையுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம், பட்டம் மற்றும் பட்டயம் பெறாத பெண்களுக்கு 25,000 ரூபாய் திருமண நிதி உதவித்தொகையுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம என திருமண நிதி உதவித்தொகை வழங்கும் திட்டம், விலையில்லா “சானிடரி நாப்கின்” வழங்கும் திட்டம், விலையில்லா கால்நடைகள், ஊரகப்பகுதிகளில் மகளிருக்கென சுகாதார வளாகம், பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கென தனி அறை போன்ற பல்வேறு மகளிர் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை தீட்டி பெண்களை அம்மா அவர்கள் பாதுகாத்து வந்தார்கள்.

அம்மா அவர்களின் வழியில் ஆட்சியினை வழிநடத்தும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பெண்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பான ஆட்சியினை உறுதி செய்து வருகிறார்.

மேலும், ரூ.2500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொறுத்தவரையில் பயோ மெட்ரிக் முறையில்லாமல் பழைய முறையிலேயே தான் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

Similar News