திருவாரூரில் தேசிய கோடி கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள் - காவல்துறை நடவடிக்கை என்ன?

திருவாரூர் அருகே சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தையும் கொடி மேடையையும் சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Update: 2022-08-16 06:45 GMT

திருவாரூர் அருகே தேசியக்கொடி ஏற்ற அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. குறிப்பாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அம்ருத்சரோவர் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 75 குளங்கள் புதிதாக தூர்வாரப்பட்டு அந்த குளங்களின் ஓரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கொடி மேடை மற்றும் கொடிக்கம்பம் அமைத்து சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி திருவாரூர் மாவட்டம் முழுவதும் அம்ருத்சரோவர் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 75 குளங்கள் தூர்வாரப்பட்டு அனைத்து குளங்களின் ஓரங்களிலும் கொடிமேடை மற்றும் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் திருவாரூர் அருகே புலிவலம் தாமரைக் குளத்தின் அருகில் திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் புதிதாக கொடி மற்றும் கொடி கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று காலை கொடியேற்றுவதற்காக அந்த பகுதி அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றனர்.

அப்போது தேசியக்கொடி ஏற்ற அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் சாய்ந்து கிடந்தது.மேலும் மேடையும் உடைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.இதில் மர்ம நபர்கள் கொடிக்கம்பம் மற்றும் கொடி மேடையை சேதப்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்ற அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பம் மற்றும் கொடி மேடையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





 


Similar News