கட்சி துவக்கம்! ரஜினி ரசிகர்களுக்கு அர்ஜூன மூர்த்தி அதிரடி அழைப்பு!

கட்சி துவக்கம்! ரஜினி ரசிகர்களுக்கு அர்ஜூன மூர்த்தி அதிரடி அழைப்பு!

Update: 2021-01-28 17:15 GMT

தான் தொடங்கப்போகும் கட்சியில் வந்து சேருங்கள் என்று அர்ஜூன மூர்த்தி ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சம்பவம் மீண்டும் தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும்போது இரண்டு நிர்வாகிகளை நியமித்து உத்தரவு பிறப்பித்தார். அதில் ஒருவர் அர்ஜூன மூர்த்தி மற்றொருவர் தமிழருவி மணியன் ஆவார்கள். இதனிடையே தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தற்போது நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்சி தொடங்குவதில்லை என்று நடிகர் ரஜினி திட்டவட்டமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அவர் நியமன செய்த தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூன மூர்த்திக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் தமிழருவி மணியன் தான் இனிமேல் அரசியலில் தொடரபோவதில்லை என்று வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் தொடங்குவதாக இருந்த கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டவர் அர்ஜூன மூர்த்தி. இவர் பா.ஜ.க.வில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார். இதனிடையே அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனிடையே ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தபிறகு அமைதியாக இருந்து வந்த அர்ஜூன மூர்த்தி தானே ஒரு புதிய கட்சியை தொடங்குவதாக தற்போது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ரஜினி தரப்பில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் தனது ரசிகர்கள் விருப்பப்பட்ட கட்சியில் இணைந்து கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரது ரசிகர்கள் மவுனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று தான் தொடங்கவிருக்கும் கட்சி தொடர்பாக அர்ஜூன மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், புதிய சித்தாந்தத்துடன் புதிய அரசியல் கட்சியை தொடங்க இருக்கிறேன். எனது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் முற்றிலும் பாஜகவுக்கு மாற்றாகவே இருக்கும்.

மேலும், ரஜினியின் படமோ அல்லது அவரது வார்த்தையோ இதில் இடம் பெறாது. எனவே ரஜினி ரசிகர்கள் என் கட்சியில் இணைந்து பணியாற்றலாம் என அழைப்பு விடுத்துள்ளார். இவரது பேட்டி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News