ஆற்றுமணலை பதுக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் - கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சேத்தூரில் மேற்குத்தொடர்ச்சி மலை அருகே உள்ள ஆற்றுப்படுகையிலிருந்து மணல் திருட்டு நடைபெறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதியில் தினமும் அதிகாலை முதல் இரவு 8 மணி வரையில் மணல் கடத்தல் நடைபெறுவதாக ராஜபாளையம் வட்டாட்சியர் ராமசந்திரனுக்குப் புகார் வந்தது.
அவர் வருவாய்துறையினருடன் திடீர் ரோந்துக்குச் சென்றார். அப்போது குடியிருப்புப் பகுதிகளில் மணல் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த சோதனையில், 30 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த மணலை எல்லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ராஜா என்ற கருப்பையா மொத்தமாகப் பதுக்கிவைத்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கருப்பையாவுக்குச் சொந்தமான இடத்திலும் சோதனை செய்தனர். அங்கும் மணல் இருந்தது. ஆற்று மணலை இருப்பு வைப்பதற்கான முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லை.
இதைத் தொடர்ந்து அவருக்கு சொந்தமான குடோன்களுக்கும் சீல் வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மணலின் மொத்தச் சந்தை மதிப்பு ரூ.30 லட்சத்துக்கும் மேல் இருக்கும். இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் ராஜா என்ற கருப்பையா மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Inputs From: Vikadan