காஞ்சிபுரம் அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலி.!

காஞ்சிபுரம் அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலி.!

Update: 2021-02-04 12:43 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள மாத்தூர், இங்கு தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் 40க்கும் அதிகமானோர்கள் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதே போன்று இன்று காலை வழக்கம் போன்று ஜேசிபி இயந்திரத்தை கொண்டு பாறைகளை உடைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பாறைகள் சரிந்துள்ளது.

இதில் ஜேசிபி மற்றும் லாரிகள் சரிந்து பாறை மேற்பரப்பில் இருந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் அதிகமான ஊழியர்கள் பாறை நடுவே சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் அரசு அதிகாரிகள் முகாமிட்டு, மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். பாறைகள் அதிகமாக இருப்பதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிலர் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக தொழிலாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மீட்பு பணிகள் நிறைவடைந்த பின்னர்தான் விபத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
 

Similar News