தமிழகத்தில் 1 கோடியே 4 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.58,310.92 கோடி வட்டியில்லா கடன்!
தமிழகத்தில் 1 கோடியே 4 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.58,310.92 கோடி வட்டியில்லா கடன்!
தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 4 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.58,310.92 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
தமிழகத்தில் போதுமான அளவு பருவமழை பெய்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு தங்குதடையின்றி பயிர்கடன், விதைகள், உரம், மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்குவது, போதுமான அளவு உரம் இருப்பு வைப்பது, வேளாண் உபகரணங்களை குறைந்த வாடகையில் வழங்குவது போன்ற சாகுபடி நடவடிக்கைகள் மேற்கொள்வது, பயிர் காப்பீடு செய்து உரிய இழப்பீடு வழங்குவது போன்ற நடவடிக்கைகளை அலுவலர்கள் கண்காணிக்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை எவ்வித சேதமுமின்றி, பாதுகாப்பாக வைத்து, அவற்றை உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு தரமாக விநியோகம் செய்வதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அம்மா அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சரின் அரசு, விவசாயிகளின் மேம்பாடு மற்றும் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 2011 முதல் 7.12.2020 வரை 1,03,97,607 விவசாயிகளுக்கு ரூ.58,310.92 கோடி அளவிற்கு வட்டியில்லாப் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 முதல் நவம்பர் 2020 வரை ரூ.1,575.66 கோடி அளவிற்கு வட்டி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 2011 முதல் 30.11.2020 வரை 2,11,887 விவசாயிகளுக்கு ரூ.2,879.73 கோடி அளவிற்கு தானிய ஈட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 2016-17 முதல் 30.11.2020 வரை 50,33,302 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.9,080.60 கோடி வழங்கப்பட்டுள்ளது.