மத்திய அரசின் இ-சந்தை - தமிழகத்திலிருந்து ரூ.7185 கோடி ஆர்டர்: பலருக்கும் தெரியாத அபார திட்டம்!
மத்திய அரசின் இ-சந்தை மூலம் அரசு நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கப்படுகின்றன. அவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து, சிறு உற்பத்தியாளர்கள் கூட அரசுக்கு தங்கள் பொருட்களை விற்கலாம். மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் இருந்து 4,06,961 விற்பனையாளர்கள் அரசு இ-சந்தையில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு இ-சந்தை தொடங்கப்பட்ட 2016-க்குப் பின் இந்த இணையப்பக்கத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் நிறுவனங்கள் ரூ.1090 கோடி மதிப்புள்ள பொருட்களை கொள்முதல் செய்துள்ளனர். அதே போல் தமிழ்நாட்டைச் சேர்ந்த விற்பனையாளர்கள் அரசு இ-சந்தை மூலம் ரூ.7185 கோடி மதிப்புள்ள பொருட்களுக்கான ஆர்டர்களை பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் உள்ள எம்எஸ்எம்இ-க்களின் பங்கு ரூ.3493 கோடி மதிப்புள்ளன.
அரசு இ-சந்தை மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கொள்முதல் உச்சி மாநாடு ஆகஸ்ட் 26 (இன்று) சென்னையில் நடைபெற உள்ளது.
அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் போன்றவற்றின் கொள்முதல் தேவை என்ன என்பதை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அறிந்து கொள்ளவும் அதற்கேற்ப தொழில்களை வடிவமைக்கவும் இந்த மாநாடு உதவும்.
எம்எஸ்எம்இ தொழில் துறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்முதல் செய்கின்ற அரசுத் துறைகள், தொழில்துறை நிறுவனங்கள், தனியார் துறையினர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள்.
Input From: Press Release