தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை.!
தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை.!
காற்றின் திசைவேக மாறுபாட்டால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார், கொள்ளிடம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்தது. திருச்சி மாநகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மிதமான மழையும், தஞ்சை, தர்மபுரி மற்றும் அரூர், பென்னாகரம், ஒகேனக்கல் உட்பட பல பகுதிகளில் லேசான மழையும் பெய்து வருகிறது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.