ஏசுவை போல் மீண்டும் உயிர்த்தெழுவார்.. இறந்த உடலுடன் 20 நாள் ஜெபம் செய்த குடும்பம்.. திண்டுக்கல்லில் பரபரப்பு.!

ஏசுவை போல் மீண்டும் உயிர்த்தெழுவார்.. இறந்த உடலுடன் 20 நாள் ஜெபம் செய்த குடும்பம்.. திண்டுக்கல்லில் பரபரப்பு.!

Update: 2020-12-31 19:19 GMT

திண்டுக்கல் அருகே உயிரிழந்த பெண் காவலர், ஏசு கிறிஸ்துவைப் போன்று மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் கிட்டத்தட்ட 20 நாட்களாகப் பூட்டிய வீட்டுக்குள் உடலுடன் ஜெபம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த அன்னை இந்திரா என்பவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வந்தார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பால்ராஜ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இந்திரா கிறிஸ்தவராக மதம் மாறியுள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பால்ராஜ் இந்திராவைப் பிரிந்து சென்றுள்ளார். இதனையடுத்து இந்திரா, திண்டுக்கல் நந்தவனப்பட்டி ட்ரசரி காலனி பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவரது சகோதரி சகுந்தலா என்பவர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இந்த நேரத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அன்னை இந்திரா உள்ளிட்ட யாரும் வீட்டை விட்டு வெளியே வராத காரணத்தினால், விருப்ப ஓய்வுக்கான ஆணையை வழங்குவதற்காக பெண் காவலர் ஒருவர் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில், துர்நாற்றம் வீசியதை அறிந்த அவர் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கதவைத் திறந்து பார்த்தபோது அன்னை இந்திரா இறந்து இருபது நாட்களுக்கும் மேலாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. அன்னை இந்திராவின் உடலுடன் சகாதரி சகுந்தலா, இரு குழந்தைகள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரான சுதர்சன் ஆகியோர் 20 நாட்களாகத் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த 7ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாகச் சுயநினைவை இழந்த அன்னை இந்திரா படுக்கையிலேயே மயக்கம் போட்டுள்ளார். ஆனால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் கர்த்தர் ரட்சிக்க மாட்டார் என கூறிய மதபோதகர் சுதர்சன், ஜெபம் செய்வதாகக் கூறி அவர்களுடன் தங்கியுள்ளார்.

அப்போது இருந்து அன்னை இந்திரா கண் விழிக்காத நிலையில், சில நாட்களில் உடல் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து வீட்டைப் பூட்டிக்கொண்டு கிட்டத்தட்ட 20 நாட்களாக ஜெபம் செய்து வந்துள்ளனர். இதனிடையே சகோதரி மற்றும் குழந்தைகளுடன் போலீசார் விசாரணை நடத்தியபோது, அன்னை இந்திரா இறக்கவில்லை. அவர் தற்போது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். ஏசு கிறிஸ்துவைப் போன்று விரைவில் அவர் உயிர்த்தெழுந்து வருவார். அதனால் உடலை எங்களிடமே ஒப்படைத்துவிடுங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளனர்.

இதனை கேட்ட போலீசார் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவர்களை வரவழைத்த போலீசார் அங்கேயே பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். இதன் பின்னர் குழந்தைகள் தாய் இறந்தது தெரியாமல் அங்கும், இங்கும் சுற்றிக்கொண்டு இருந்துள்ளனர். தங்களின் தாய் மீண்டும் உயிர்த்தெழுவார் என பேசிய சம்பவம் அனைவரையும் மீண்டும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Similar News