விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது PSLV சி- 51 ராக்கெட்: இஸ்ரோ தகவல்!

Update: 2021-02-28 10:48 GMT

PSLV சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு PSLV சி-51 ராக்கெட், 19 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.


 இதில் பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் அவற்றை கண்காணிக்கவும் விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காகவும் "அமேசோனியா–1" செயற்கைக் கோள் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் மூலம் பிரேசில்       நாட்டுக்குச் சொந்தமானஅமேசோனியா-1 செயற்கை கோள், இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் மற்றும் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்கள் என மொத்தம் 19 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.


இந்நிலையில் PSLV சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "PSLV சி-51, அமேசானியா -1 ஐ இன்று அதன் துல்லியமான சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக ஏவியது என்று அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பணியில், இந்தியாவும், இஸ்ரோவும் பிரேசிலால் வடிவமைக்கப்பட்ட மற்றும் இயக்கப்படும் முதல் செயற்கைக்கோளை ஏவுவதில் பெருமை மற்றும் மகிழ்ச்சி அடைகின்றன. இந்த சாதனைக்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Similar News