மண் காப்போம் இயக்கத்திற்கு 320 கோடி மக்கள் ஆதரவு தமிழ்நாடு திரும்பிய சத்குருவுக்கு உற்சாக வரவேற்பு
மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இதுவரை 650-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்
மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இதுவரை 650-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சர்வதேச அளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ள சத்குருவின் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு உலக அளவில் 320 கோடி பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுவரை 74 நாடுகள் இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. மேலும் இந்தியாவில் 8 மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக இவ்வியக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இன்று (ஜூன் 21) தமிழ்நாடு திரும்பிய சத்குருவிற்கு சத்தியமங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பிறகு, கோவை வந்த சத்குரு அவர்கள் சூலூர் விமானப் படை தளத்தில் நடைபெற்ற 'மண் காப்போம்' இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்நாத்சிங் அவர்கள் காணொளி வாயிலாக கலந்துகொண்டார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் பேசுகையில், "உலக அளவில் அடுத்த 60 ஆண்டுகளுக்குள் மண் வளம் முற்றிலும் அழிந்துவிடும் என சர்வதேச விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.அதனால் மண் அழிவைத்தடுக்க நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இதற்காக சத்குரு அவர்கள் மண் காப்போம் என்ற இயக்கத்தை தொடங்கி பெரும் செயலை முன்னெடுத்திருப்பதற்கு எனது பாராட்டுக்கள். கலை, கலாச்சாரம், நாகரீகம், உணவுமுறை என அனைத்திற்கும் மண்தான் அடிப்படை. மண் தான் நம் சமூகத்தின் உயிராகவும் உள்ளது. இதுபோன்ற பெரும்பணிகளை சத்குரு அவர்கள் தொடர்ந்து செயல்படுத்த எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேசினார்.
அதில் சத்குரு அவர்கள் பேசுகையில், "இந்த மண் காப்போம் இயக்கத்தின் பயணத்தில் கிட்டத்தட்ட 28,000 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம் செய்துள்ளேன். எல்லா இடங்களிலும் மக்கள் சிறப்பான ஆதரவு அளித்தார்கள். 74 நாடுகள் மண் காப்போம் இயக்கத்தின் கொள்கைகளை செயல்படுத்துவோம் என உறுதியளித்துள்ளனர். 8 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதுவரை 320 கோடிப்பேர் சமூக வலைத்தளங்கள் மூலம் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஒரு பேராதரவு இதுவரை எங்கும் நடந்ததில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்குத் தேவையான நீண்டகால பயன் பெறக்கூடிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால், அதற்கு அந்நாட்டு குடிமக்களின் ஆதரவு மிக மிக அவசியம். பொதுவாக எல்லா ஜனநாயக நாடுகளிலும் ஐந்தாண்டுகள் மட்டுமே ஒரு ஆட்சி நடைபெறுகிறது. அதனால் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு குறுகிய கால திட்டங்களை மட்டுமே நிறைவேற்ற நினைக்கின்றனர். மக்களும் அதேபோல் சின்னச்சின்ன விஷயங்களைத்தான் கோரிக்கைகளாக முன் வைக்கின்றனர். ஆனால் இப்போதுதான் முதல்முறையாக மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டுமென்ற நீண்டகால கோரிக்கையை மக்கள் தெரிவித்துள்ளனர்" என்றார்.